திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட போலீசில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பிய போலீசாருக்கு எஸ்பி அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதித்து, சிகிச்சைக்கு பின், பணிக்கு திரும்பிய, போலீசாரை வரவேற்கும் நிகழ்ச்சி, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. போலீசாரின் பேண்டு வாத்யம் முழங்க, சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, மலர் தூவி சக போலீசார் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. அரவிந்தன், வைரஸ் பிடியில் இருந்து தப்பிய போலீசாருக்கு, பூங்கொத்து மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், ‘’கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணியில், பிற அரசு துறை பணியாளர்களுடன், போலீசார் களத்தில் இருந்து பணியாற்றி வருகிறோம். ஊரடங்கால் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
இதனால், சில போலீசார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு “டிஸ்சார்ஜ்’’செய்யப்பட்டு பணிக்கு திரும்பி உள்ளனர். தன்னம்பிக்கையுடன் இருந்தால், கொரோனாவை வெற்றி கொள்ளலாம் என்பதற்கு நீங்களே உதாரணம். மற்ற போலீசாரும் பூரண குணமடைந்து, விரைவில் பணிக்கு திரும்புவர்’’என்றார்.