சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் நிர்வாக தோல்விக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தனது துறைசெயலாளருக்கு சரிவர வழிகாட்ட முடியாதவர் அமைச்சர் விஜயபாஸ்கர் எனவும் டி.ஆர்.பாலு விமர்சனம் செய்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறி வருவதாக திமுக தலைவர் கூறுவது முற்றிலும் தவறானது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுவதற்கு தகுதி இருக்கிறதா என்பதைச் சற்று அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். ஜனவரி 7ம் தேதியே மத்திய சுகாதார அமைச்சர் கடிதம் எழுதியும் மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதவர். ஜனவரி 7ம் தேதி எழுதிய கடிதத்தைத் வைத்துக்கொண்டு இன்றுவரை முழு வீச்சில் நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருப்பது யார்? என்றும் டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.
மேலும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்று கூறியவர் தான் அமைச்சர் விஜயபாஸ்கர். கொரோனாவால் ஏற்பட்ட 236 மரணங்களை வெளியிடாமல் மறைந்தவர் என்றும் டி.ஏர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா நோய் மக்கள் உயிரோடும் வாழ்வாதாரத்தோடும் சம்பந்தப்பட்டது என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் உணராதவர். கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக விஜயபாஸ்கர் பொய் கூறுகிறார். இன்றைக்குத் தனது துறை செயலாளரை கூட சரிவர வழிகாட்ட முடியாமல், அவரை பணியிட மாற்றத்தில் இருந்து காப்பாற்றவும் முடியாமல் தவிப்பது யார்? என்று கேள்வி எழுப்பிய அவர், நிர்வாகத் தோல்விக்காக தன் துறை செயலாளர் மாற்றப்பட்டவுடன் அமைச்சர் விஜயபாஸ்கரும் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போயிருக்க வேண்டும் என தெரிவித்தார்.