சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு காலரா மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநில சிறுவர்கள் இருவர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காசிமேடு சிறுவர் காப்பகத்தில் தங்கியிருந்த 35க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கடந்த 6ம் தேதி நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தண்டையார்பேட்டையில் உள்ள அரசு காலரா சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில் வடமாநில ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த 11ம் தேதி தப்பியோடிவிட்டான். போலீசார் அவனை தேடி வரும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறுவர்கள் நேற்று இரவு தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் புது வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் தப்பியோடிய சிறுவர்களை தேடி வருகின்றனர்.
இளம்பெண் தப்பியோட்டம்!
அதேபோல், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளியும் தப்பி ஓடியுள்ளார். 19 வயதான அந்த இளம்பெண்ணுக்கு கடந்த 10-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், அவர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சென்னை அம்பத்தூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளி தப்பி ஓடினார். தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த 40 வயது நபர் தப்பியோடிய நிலையில், நோயாளியை சுகாதாரத்துறையினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.