சென்னை: சென்னை மாநகர காவல் துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வை தீவிரமாக செய்து வருகிறது. போலீஸ் கமிஷனர் ஏ. ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி 12 காவல் மாவட்டங்களிலும் கொரோனா சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், எழும்பூரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் நேற்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இம்முகாமை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை காவல் துறை தலைமையிட கூடுதல் கமிஷனர் ஜெயராமன், தலைமையிட துணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, விமலா, திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன், ஆயுதப்படை துணை கமிஷனர் சவுந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசுகையில், ‘சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அனைத்து காவல்நிலையங்களும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். காவலர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை கழுவ வேண்டும். ேதவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் அவர்களை குறித்து உடனே மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரோனா குறித்து தவறாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். சமூக வலைத்தளங்களை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வால் மட்டுமே கொரோனாவை நாம் கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.