வேளச்சேரி: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 180வது வார்டுக்கு உட்பட்ட தரமணி, மகாத்மா காந்தி நகர். இந்த நகரில் 36 தெருக்கள் உள்ளன. இங்கு 1600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில், 8ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 20 வருடத்திற்கு முன் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் கழிவுநீர் தரமணி பஸ் நிலையம் அருகே உள்ள கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து பம்பிங் செய்து அனுப்பப்
படுகிறது. கடந்த நான்கு வருடங்களாக இந்த பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவது வழக்கம் ஆகிவிட்டது. அதனால், பாதாளச் சாக்கடைத் தொட்டி மூடி வழியே தண்ணீர் வெளியேறி சாலைகளில் குளம்போல தேங்குவது வழக்கம்.
இதனால், பொதுமக்கள் சாலையில் நடக்க அச்சப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
தேங்கிய கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவித்தால் மாநகராட்சி ஊழியர்கள் வந்து கழிவு நீரை லாரிகள் உறிஞ்சி எடுத்து செல்வதும், மீண்டும் சில வாரங்களில் மீண்டும் ஏதாவது ஒரு தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மீண்டும் அந்தப் பகுதியில் கழிவுநீர் தேங்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. மீண்டும் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் வந்து கழிவுநீர் லாரியை அனுப்பி உறிஞ்சி எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது.
கடந்த 4 மாதமாக இந்த பகுதியில் மீண்டும் அதே பிரச்சினை எழுந்துள்ளது. கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு சாலைகள் தேங்குவதால் குழாய்களில் வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பாதாளச் சாக்கடைத் தொட்டி மூடி வழியே கழிவுநீர் வழிந்து நாள் கணக்கில் சாலையில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன் அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.