×

தள்ளாடும் தடயவியல் துறை தடம் மாறும் வழக்குகள்

கோவை: தமிழகத்தில் தடயவியல் துறையின் ஆமை வேகத்தால் வழக்குகளின் விசாரணை நத்தை வேகத்தில் நகர்கிறது. தமிழக காவல்துறையில் டெக்னிக் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை வழக்குகளில் போதுமான தடயம் கிடைக்காத நிலையில் வழக்கு விசாரணை இழுபறியில் இருக்கிறது. குற்றவாளிகளை பிடித்து, நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். கோவை, சேலம், மதுரை, திருச்சி, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், தஞ்சாவூர், விழுப்புரம் மண்டல தடயவியல் பகுப்பாய்வகங்களில் சூப்பர் ஸ்ெபஷாலிட்டி ஆய்வக வசதி அமைக்கும் திட்டம் பல ஆண்டாக இழுபறி நிலையில் இருக்கிறது. ‘’அயோன் ஸ்கேன்’’ என அழைக்கப்படும் ெவடிபொருள் மாதிரி சேகரிப்பு ஆய்வகம் மண்டல தடயவியல் துறையில் செயல்படுத்த 3 ஆண்டிற்கு முன் உத்தரவிடப்பட்டது. ஆனால், செயல்பாட்டிற்கு வரவில்லை.

அயோன் ஸ்கேன் ஆய்வகத்தில் வெடிபொருள் வெடித்த நேரத்தில் அந்த இடத்தில் சேகரிக்கப்படும் பொருள், வெடிபொருளில் இருந்து சிதறிய பொருட்கள் போன்றவற்றை உடனடியாக அளவிட்டு கண்டறிய முடியும். பல்வேறு மாவட்டங்களில் வெடி விபத்தில் டெட்டனேட்டர், ஜெலட்டின், நைட்ரைடு போன்ற வெடிபொருட்களுக்கும், பட்டாசுக்கும் வித்தியாசம் காண முடியாமல் மண்டல தடயவியல் துறையினர் திணறுகின்றனர். சென்னை அலுவலகத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவியும் ‘டெஸ்டிங் சாம்பிள்’களை பிரிக்க பல நாட்களாகி விடுவதாக புகார் எழுந்துள்ளது. சைபர் கிரைம் போலீசில் ஆள்கடத்தல், கொலைமிரட்டல், ஆபாசபேச்சு, தீவிரவாதம் தொடர்பான பேச்சுகள் குறித்த புகார் வருகிறது. ஆனால் பேசும் நபர், அவரின் குரல் தொடர்பாக தெளிவான விவரம் தெரியாத நிலையிருக்கிறது.

ஆவண புகார்கள் குறைந்து செல்போன், வாட்ஸ்அப் ஆபாசபேச்சு, மிரட்டல் பேச்சு தொடர்பாக ஆடியோ, வீடியோ ஆதார புகார்கள் அதிகமாகிவிட்டது. இந்த புகார்களின் மீது போலீசார் உடனடியாக வழக்கு பதிவுசெய்ய முடியாத நிலையிருக்கிறது. ஆதாரங்களை ஸ்பீச் சயின்ஸ் பாரன்சிக் லேப் (வாய்ஸ் லேப்) என்ற தடய குரலியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அதன் முடிவு கிடைத்தால் மட்டுமே எப்ஐஆர் பதிவு செய்ய முடியும். மண்டல அளவில் தடயவியல் துறையில் வாய்ஸ் லேப் கிடையாது. இதனால், சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் போலீசார், மிரட்டல் புகார்கள் தொடர்பாக வழக்கு பதிவுசெய்ய தயக்கம் காட்டுகின்றனர். மண்டல அளவில் வாய்ஸ் லேப் துவங்கும் திட்டமும் நிதியின்றி முடங்கிவிட்டது. 32 மொபைல் பாரன்சிக் லேப் பிரிவும் பல்வேறு மாவட்டங்களில் முறையாக இயங்குவதில்லை. தடயவியல் துறையினர் நேரடியாக களமிறங்கி துல்லிய ஆதாரங்களை சேகரிப்பது அரிதாகவே இருக்கிறது.

இதுபற்றி தடயவியல் துறையினர் கூறியதாவது: அடக்கம் செய்யப்பட்ட மற்றும் எரிந்த சடலங்களில் இருந்து சேகரிக்கப்படும் எலும்புகளை வைத்து ஆணா, பெண்ணா, குழந்தையா, மனித எலும்பா, விலங்குகளின் எலும்பா என்பன போன்ற விவரங்களை தெரிந்துகொள்வதில் சிக்கல் இருக்கிறது. சில எலும்புகளை பல மாதங்கள் ஆய்வகத்தில் பாதுகாப்பாக வைக்கவேண்டியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் 30-க்கும் மேற்பட்ட சடலங்களின் எலும்புகள் டி.என்.ஏ சோதனைக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவற்றை, மைனஸ் 20 டிகிரி ெசல்சியஸ் குளிர்பதன நிலையில் பாதுகாக்க 2 டி.என்.ஏ குளிர்அறை தேவைப்படுகிறது.

ஆனால், இதற்கான வசதிகள் இல்லாமல் உள்ளூர் அரசு மருத்துவமனைகளின் பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில நாட்களில் டி.என்.ஏ செய்யவேண்டிய எலும்புகள் பெறப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. போதை மருந்து, எளிதில் ஆவியாகும் கரிம பொருள், விஷப்பொருட்கள் போன்றவற்றை அடையாளம் காண, வாயு நிறவியல் பிரிவு அமைக்கும் திட்டம் உள்ளது. தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்கள் மட்டுமே வழக்கின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. இதற்கேற்ப தடயவியல் துறையை மேம்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு தடயவியல் துறையினர் கூறினர்.

கை தராத கைரேகை
ஆதார் கார்டு வந்த பின்னர், கைரேகை பதிவு துறையின் பணி எளிதாகி விட்டது. போலீசின் சி.சி.டி.என்.எஸ் என்னும் ஆவணம் மற்றும் குற்றவாளிகளின் வலைபின்னல் வெப்சைட்டில் 43 ஆயிரம் குற்றவாளிகளின் கைரேகை பதிவாகியுள்ளது. ஆனால், குற்ற வழக்குகளில் கைரேகை மூலமாக துப்பு துலங்குவது அரிதாகிவிட்டது. கொலை மற்றும் கொலை நடந்த இடங்களுக்கு போலீசார் தாமதமாக செல்வதாலும், வேடிக்கை பார்ப்பவர்கள் கண்ட இடங்களில் கை வைப்பதாலும் விரல் பதிவு துல்லியமாக பெற முடியாத நிலை இருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் குற்றவாளிகளின் கைரேகைக்கு பதிலாக விசாரணைக்கு சென்ற போலீசாரின் கைரேகை பதிவுகளை பெற்று விசாரித்த வேடிக்கையும் நடந்துள்ளது. கண்ணாடி மற்றும் மென்மையான சமதளத்தில் பதிவாகும் கைரேகைகளை மட்டுமே ஆதாரமாக ஏற்க முடியும் என்ற நிலை இருக்கிறது. பெரும்பாலான திருடர்கள் கிளவுஸ் அணிந்து திருடுவதால் கைரேகை பதிவு பயனில்லாமல் போகிறது. இதனால், வழக்குகள் தடம்மாறும் நிலை உள்ளது.

சினிமா பாணி கொலை
தமிழகத்தில் சந்தேக மரணங்கள் பெரும்பாலும் தற்கொலை வழக்காக (இ.த.ச.பிரிவு 174) பதிவு செய்யப்படுகிறது. தடயவியல் துறையின், உடற்கூறு ஆய்வு (சீரலாஜி டெஸ்ட்) முடிவின் அடிப்படையில் வழக்குகள் மாற்றம் செய்யப்படுகிறது. கோவையில் தூக்குபோட்டு இறந்த வாலிபரின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் பெறப்பட்டது. விசாரணையில் எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில், இறந்தவரின் உடல் பாகங்கள் தடய ஆய்வகத்தில் சோதனையிடப்பட்டது. இதில், நுரையீரலில் தேங்கிய காற்றின் அழுத்த அளவை வைத்து, இது தற்கொலை இறப்பு அல்ல... என தடயவியல் துறை ரிப்போர்ட் வழங்கியது. போலீஸ் விசாரணையில், பணம் கேட்டு மிரட்டிய ரவுடி, வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி, தூக்கு மாட்டி நாற்காலியில் இருந்து குதிக்க வைத்து, சினிமா பாணியில் நூதனமாக கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு,  தடயவியல் துறையின் சாதனைக்கு சான்றாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : field trail , Dissociative,forensic,field,trail,cases
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...