- திமுகின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு
- கன்னிலோங்கி
- பிரதம
- சென்னை
- தமிழ்நாடு சட்டமன்றம்
- தேர்தல் ஆணையம்
- தமிழ்
சென்னை: தமிழக சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த சட்டசபைக்கான தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்தி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தேர்தலுக்கான பணிகளில் இறங்கியுள்ளன. திமுக தனது கூட்டணியில் ஏற்கனவே உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. வலுவான கூட்டணியை அமைத்துள்ள நிலையில், தேர்தல் பணிகளில் திமுக படுவேகமாக களப்பணிகளை செய்து வருகிறது. திமுகவை பொறுத்தவரை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவரது நடவடிக்கைகள், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன. இதை தொடர்ந்து, ‘உடன்பிறப்பே வா’ என்று கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த ஜூன் மாதமே தொடங்கி விட்டார். சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை நேரில் சந்தித்து கட்சியை வலுப்படுத்தவும், உட்கட்சி பூசல்களை களைந்தும் அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறார். மேலும் தேர்தல் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. வழக்கமாக தேர்தல்களின் போது, அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் பொதுமக்களை நேரில் சந்தித்து அதன் அடிப்படையிலேயே திமுக எப்போதும் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும். இதனால், திமுக தேர்தல் அறிக்கைக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுவது வழக்கம்.
இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை கனிமொழி எம்.பி. தலைமையில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன், வர்த்தகரணி துணைத்தலைவர் அமைச்சர் கோவி.செழியன், சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணி செயலாளர் எழிலன் எம்.எல்.ஏ., சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டரணி துணை செயலாளர் தமிழரசி ரவிக்குமார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம், ‘கனவு தமிழ்நாடு’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சுற்றுப்பயணங்கள் குறித்தும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுநலச்சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கையை தயாரிப்பார்கள். இந்த குழு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1-ம்தேதி திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
