தனது அபிமான ஹீரோவுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, ஒவ்வொரு ரசிகரும் ஆசைப்படுவது வழக்கம். மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி, சமீபத்தில் உடல்நிலை தேறி வந்த பின்பு, பழையபடி படப்பிடிப்பில் உற்சாகமாக பங்கேற்று நடித்து வருகிறார். எப்போதுமே அவர் உள்ளூர் மற்றும் வெளியூர் படப்பிடிப்புகளில் தனது ரசிகர், ரசிகைகளை சந்தித்து பேசுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் கொச்சியிலுள்ள போல்ட் காட்டி பேலஸில் ரசிகர்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகளை மம்மூட்டி செய்திருந்தார்.
இதில் இளைஞர்கள், வயதானவர்கள், சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பத்தினம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர், ஆலப்புழா, கோழிக்கோடு உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர், ரசிகைகள் பங்கேற்று மம்மூட்டியுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து 5 மணி நேரம் நடந்து முடிந்த போட்டோ எடுக்கும் நிகழ்ச்சியில், மம்மூட்டி சோர்வடையாமல் உற்சாகமாக போஸ் கொடுத்து அசத்தினார்.

