×

கண் பார்வைக் கோளாறை சரி செய்யும் தூவாய் நாதர்..!!

சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். திருவாரூர் தியாகராஜர் கோவில் கீழரத வீதியில், தேருக்கு எதிரில் தூவாய் நாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 89வது தலம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். ஒரு காலத்தில் இக்கோவில் கடலினுள் மண்கோவிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது. ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் தனது இரண்டாவது துணைவியான சங்கிலி நாச்சியாரிடம்,”நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்” என்று உறுதி மொழி கொடுத்தார்.

திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது, காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர், சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார்.

மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், “இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடித் தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும்” என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்றார். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம்.

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்குளத்தில் நீராடி இங்குள்ள இறைவனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் பார்வை குறைபாடு சரியாகும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள இறைவனுக்கு பாலபிஷேகம் செய்தும், அன்னதானம் செய்தும் வழிபாடு செய்கின்றனர்.

Tags : Duai Nathar ,
× RELATED வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க எது முக்கியம்?