×

மது போதை தகராறில் தந்தை அடித்து கொலை: மகன் கைது

பூந்தமல்லி: திருவேற்காடு காமதேனு நகரைச் சேர்ந்தவர் டில்லி (63). இவரது மகன் பிரகாஷ் (35), டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவி மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். பிரகாஷ் சரியாக வேலைக்கும் செல்வதில்லை என கூறப்படுகிறது. மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி எப்போதும் போதையிலேயே இருப்பார் எனவும் தெரிகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தந்தை மற்றும் மனைவியுடன் சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி தேவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருவேற்காடு பெருமாளகரத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி கோபித்துக் கொண்டு சென்று விட்டதால் கடும் ஆத்திரத்தில் இருந்த பிரகாஷ் நேற்று பிற்பகலில் மீண்டும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது தந்தை டில்லியுடன் போதையில் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் பெற்ற தந்தை என்றும் பார்க்காமல், அவரை கீழே தள்ளி, சுவற்றில் தலையை மோத வைத்து அடித்து உதைத்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த டில்லி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், டில்லியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருவேற்காடு போலீசார், பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்….

The post மது போதை தகராறில் தந்தை அடித்து கொலை: மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Poondamalli ,Tiruvetadu ,Kamadenu City, Delhi ,Prakash ,
× RELATED மதுரவாயலில் பரபரப்பு வங்கி மேலாளர் தற்கொலை: போலீசார் விசாரணை