×

தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?

தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால், அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. இது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா?
தர்மம் நான்கு வகைப்படும்

அதில் முதலாவது சாமான்ய தர்மம். பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள  வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான்  ராமர்.

இரண்டாவது சேஷ தர்மம்

சாமானிய தர்மங்களை, ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால், கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர,  வேறு ஒன்றும் சதம் அல்ல என்ற நினைப்பு ஏற்படும். இத்தகைய தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர். இதைப் பின்பற்றிக் காட்டினான் லட்சுமணன்.

மூன்றாவது விசேஷ தர்மம்

தூரத்தில் இருந்து கொண்டே, எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மம். இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது.  இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன்.

நான்காவது விசேஷதர தர்மம்

பகவானை விட அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதரதர்மம். சத்ருக்னன் பாகவத உத்தமனாகிய  பரதனுக்குத் தொண்டு செய்தே கரையேறி விட்டான். ஆக, இந்த நான்கு தர்மங்களையும்,  ராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள் மூலம் உலகுக்கு  எடுத்துக் காட்டவே தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன!
 
- ஏ.எஸ். கோவிந்தராஜன்

Tags : children ,Dasaratha ,
× RELATED உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக...