×

செல்வங்கள் அருள்வாள் சுந்தர மகாலட்சுமி

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள அரசர்கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தர மகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது தனி அதிசயமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு முறை ஜனக மகாராஜாவும் பெருமாளும் இத்தலத்தில் சேர்ந்திருக்க நேரிட்டதால் இத்தலம் அரசர்கோயில் என்றானதாம்.நான்முகனுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டது. கலங்கிய நான்முகன் சாப விமோசனத்தை நாடி முனிவர்களிடம் ஆலோசனை கேட்டபோது ‘‘மண்ணாளும் வேந்தனும், விண்ணாளும் விஷ்ணுவும் சேர்ந்து எந்த இடத்தில் காட்சி தருகிறார்களோ அங்குதான் உனக்கு சாப விமோசனம். உடனே பூலோகத்திற்குச் செல்வாயாக!’’ என்றனர் முனிவர்கள். அதன்படி மண்ணுலகம் வந்தார் நான்முகன்.

தாம் இவ்வூரில் எழுந்தருள வேண்டும், நான்முகனுக்கு சாப விமோசனம் அருள வேண்டும் என்று நாரணயனன் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார். அதனாலேயே இந்த அரசர் கோயிலில் எழுந்தருளினார். அதேசமயம் புனித யாத்திரையாக பூவுலகம் முழுவதும் சென்று கொண்டிருந்த ஜனக மகாராஜாவும் இத்தலத்தின் வழியாக வந்து கொண்டிருந்தார். நாரணயனன் எழுந்தருளிய தகவலைக் கேள்விப்பட்டு அவர் பெருமாளை தரிசிக்க சென்றார். இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாத நான்முகன் கையில் கமண்டலத்துடன் இப்பகுதிக்கு வந்து தன் தவத்தைத் தொடங்கி மாதவனின் ஆசியைப் பெற்றார். ஜனக மன்னனையும், பெருமாளையும் ஒரு சேர தரிசித்து சாபவிமோசனம் பெற்றார். அந்த மகிழ்ச்சியில் அங்கேயே சிறிது காலம் தங்கி பெருமாளை ஆராதித்தார். தினமும் வந்து பெருமாளை தரிசிப்பதை ஜனக மகாராஜாவும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் ஜனகர் வராததால் பெருமாள், ஜனகர் தங்கியிருந்த இடத்திற்கே புறப்பட்டு வந்தார். அந்த வேளையில் ஜனகர் அங்கு இல்லை. தானே ஜனகர் அமரும் சிம்மாசனத்தில் அமர்ந்து ஜனகர் தனக்குச் செய்வது போன்றே பூஜைகளை செய்துகொண்டார். பிறகு, ‘ஜனகர் செய்ய வேண்டிய பூஜைகள் இன்று நடந்து விட்டன’ என காவலாளிகளிடம் சொல்லி பெருமாள் புறப்பட்டார். ஒரு ராஜாங்க விஷயமாக வெளியே சென்றிருந்த ஜனகர் திரும்பி வந்து தன் சிம்மாசனத்திற்கு அருகே பெருமாளுக்கு தான் செய்தது போன்றே பூஜைகள் நடைபெற்றிருந்ததைப் பார்த்து காவலாளிகளிடம் வினவ, நடந்ததை அறிந்து சிலிர்த்தார்.

தன் நித்யகர்மாவிலிருந்து தான் தவறிவிட்டதற்குப் பிராயச்சித்தமாக பெருமாளுக்கு ஆலயம் எழுப்ப விண்ணப்பித்தார். ஆனால் பெருமாளோ தேவலோக விஸ்வகர்மாவினால் மட்டுமே இங்கு ஆலயம் எழுப்ப முடியும் என்று கூற அதன்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது.நித்யகர்மா செய்ய ஜனகர் வராததால், பெருமாளே அவர் இருப்பிடம் நோக்கிச் சென்ற விவகாரத்தில் மகாலட்சுமி மனம் வருந்தினாள். பரந்தாமனை நோக்கி பக்தன் வரலாம். பக்தனை நோக்கி பரந்தாமன் செல்லலாமா? அவன் அவ்வளவு பெரிய பக்தனா? கோபம் கொண்டாள்.

அதனை அறிந்த பரமாத்மா, ‘‘இங்கு எழும் ஆலயத்தில் உனக்கே முதல் மரியாதை, கேட்ட வரங்களை கேட்டவாறே அருளும் மகத்தான சக்தியையும் உனக்கு அருள்கிறேன். இத்தலத்தில் உன்னை தரிசித்து உன் அருள் பெற்றவர்கள் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள்’’ என்று சொல்லி மகாலட்சுமியின் கோபம் தீர்த்து, அவளை மகிழ்வித்தார். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமி அவருக்கு உணவிட்டு, உபசரித்து, தன் சார்பாக எப்போதும் பெருமாள் தம்முடைய கரத்தில் ஒரு தாமரை மொக்கை வைத்துக்கொண்டு அருள்பாலிக்குமாறு கேட்டுக் கொண்டாள். அதன்படியே பெருமாளும் தன் கரத்தில் தாமரை மொக்கை ஏந்தி கமலவரதராஜப் பெருமானாக கோயில் கொண்டார்.

ஆலய முகப்பை தாண்டி உள்ளே நுழைந்தால் பலிபீடம். அடுத்து கருடாழ்வார் மண்டபம். அதற்கு நேரே பெருமாள். வலது புறம் தாயாருக்கு தனிக் கோயில். இத்தல சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும். கிழக்குப் பார்த்த சந்நதியில் அருளே வடிவாய் அழகே உருவாய் வீற்றிருக்கிறாள் பிராட்டி. பெயருக்கு ஏற்றாற்போல் சுந்தரியாக மனதை கொள்ளை கொள்கிறாள். மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க, கீழிரு கரங்கள் அபய-வரத முத்திரைகள் காட்ட, பத்மாசனத்தில் பரப்ரம்ம ஸ்வரூபிணியாக அமர்ந்திருக்கிறாள்.

இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல். அழகு ததும்பும் அன்னையின் திருவடிகளை மனம் குவிந்து தரிசிக்கலாம். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விசேஷ திருமஞ்சனம் மகாலட்சுமிக்கு செய்யப்படுகிறது. அச்சமயம் தேவியை வணங்குவோர்க்கு கல்வி, வியாபாரம், திருமணம் சிறக்கிறது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

வரலட்சுமி விரதத்தன்றும். அக்ஷய திருதியையன்றும் இக்கோயில் விழாக்கோலம் கொள்கிறது. அவள் மண்டபத்தின் முன் ஒரு இசை மண்டபம் உள்ளது. அங்குள்ள ஒவ்வொரு தூணும், நம் விரலால் சுண்ட, ஒவ்வொரு ஸ்வரத்தை எழுப்புகிறது. நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக இங்குள்ள ஒரு சிறு துளையில் குச்சி ஒன்றை உள்ளே செருகினால், அது மறு பக்கம் வெளி வரும் போது நான்கு பாகங்களாகப் பிளந்து வருகிறது.

மண்டபத்திற்கு வெளியே வலது புறம் அட்சய கணபதி, வைணவ சம்பிரதாயப்படி தும்பிக்கை ஆழ்வாராக அருட்கோலம் கொண்டுள்ளார். அனுமன் ஒரு முறை விநாயகரிடம் அரசர்கோயில் நிவேதனங்களை தானே செய்ய அட்சய பாத்திரம் கேட்டாராம். அனுமனின் விருப்பத்தை மகாலட்சுமி அறிந்து விநாயகர் மூலம் அனுமனுக்கு அதை அளித்தாளாம். எனவே இந்த விநாயகர் அட்சய கணபதி என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலய பிரசாதங்கள் அனுமனின் மேற்பார்வையில் தயாரிக்கப்படுவதாக ஐதீகம்.

சுந்தரமகாலட்சுமியின் சந்நதிக்கு வெளியில் இடப்புறம் தலையில் பலாப்பழம் ஏந்திய பலாப்பழ சித்தரின் சிற்பம் உள்ளது. சுந்தரமகாலட்சுமி தேவிக்கு பலாப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த சித்தர் தினமும் அதனை அன்னைக்கு படைப்பாராம். இன்றும் அபிஷேக சமயங்களில் அன்னையை பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.தாயாரின் கருவறை கோஷ்டங்களில் யோகநரசிம்மமூர்த்தி, குபேரன், காளிங்கநர்த்தன கண்ணன், பரமபதநாதர், திரிவிக்ரமர் ஆகிய பெருமாளின் அம்சங்களே தேவிக்கு காவலாக வீற்றருள் புரிகின்றனர். இந்த மூர்த்திகள், திருப்பணி செய்ய பூமியை தோண்டியபோது கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமாள் சந்நதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், தேசிகர் ஆகியோரும் உறைகின்றனர். பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியோடு கமல வரதராஜராக நின்ற திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார். மூலவர் சாளக்ராமத்தால் ஆனவர். செங்கல்பட்டு – மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அரசர்கோயில் சுந்தர மகாலட்சுமி கோயில். படாளம் கூட்டு ரோட்டில் இருந்து ஷேர் ஆட்டோ மூலமும் கோயிலுக்குச் செல்லலாம்.

தொகுப்பு: மகி

The post செல்வங்கள் அருள்வாள் சுந்தர மகாலட்சுமி appeared first on Dinakaran.

Tags : Sundara Mahalakshmi ,Arsarkoil ,Chengalpattu ,Janaka Maharaja ,Perumal ,Temple ,Nanmukhan ,Selvangal Arulwal ,
× RELATED செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில்...