நெல்லை: மஹா புஷ்கரத்தையொட்டி நெல்லை அருகன்குளம் தாமிரபரணி ஆற்றில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் தீப ஆரத்தி வழிபாடு கோலாகலமாக நடந்தது. எட்டெழுத்து பெருமாள் கோயிலுக்கு சென்ற கவர்னருக்கு 144 கிலோ லட்டு வழங்கப்பட்டது. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணிக்கு மஹா புஷ்கர விழா அதன் 64 தீர்த்தக்கட்டங்களிலும், 143 படித்துறைகளிலும் பக்தர்கள் பங்களிப்போடு நேற்று துவங்கியது. இவ்விழாவில் பங்கேற்க நேற்று நெல்லை வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாபநாசத்தில் நீராடி, அங்கு நடந்த துவக்க விழாவில் பங்கேற்றார். மாலையில் நெல்லை அருகேயுள்ள அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த அவர், யாகசாலை பூஜைகளையும் பார்வையிட்டார்.
அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு தாமிரபரணி புஷ்கரணி விழா 144வது ஆண்டை குறிக்கும் வகையில் 144 கிலோ லட்டு பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் அவர் அங்குள்ள ஜடாயு தீர்த்தத்திற்கு சென்றார். தாமிரபரணி ஆற்றில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் தற்போது 144 அடி நீள படிகள் கட்டப்பட்டு பக்தர்கள் நீராட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதை கவர்னர் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். ஜடாயு தீர்த்தத்தில் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்த கவர்னர் ஆற்றுக்குள் இறங்கி சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார். ஆற்றுப்படிகளில் 4 அடி உயரத்தில் பத்தி ஏற்றப்பட்டு, அகஸ்தியர் மற்றும் தாமிரபரணி தாய்க்கு சிறப்பு பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து சப்தரிஷிகளை குறிக்கும் வகையில் 7 தாமிரபரணி தீபங்கள் மற்றும் 7 நாக தீபங்கள் இன்னிசை, மேளம் முழங்க ஏற்றப்பட்டன.
கவர்னர் மேடையில் இருந்தபடியே தீப வழிபாட்டை தரிசித்தார். தொடர்ந்து வாணவேடிக்கைகள் நடந்தன. நிகழ்ச்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர், தேவ பூஜ்யஸ்ரீ ஓங்கார நந்தா சுவாமிகள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜாராம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், டிஆர்ஓ முத்துராமலிங்கம், ஆர்டிஓ மைதிலி, நெல்லை அண்ணா பல்கலைக்கழக டீன் சக்திநாதன், வக்கீல் மீனாட்சி சுந்தரம், எட்டெழுத்து பெருமாள் கோயில் வரதராஜ பெருமாள் சுவாமிகள், ராமலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐஜி சண்முக ராஜேஸ்வரன், டிஐஜி கபில்குமார் சரத்கர், கமிஷனர் மகேந்திர குமார் ரத்ேதாட், எஸ்.பி.அருண்சக்தி குமார் தலைமையில் போலீசார் மேற்கொண்டிருந்தனர்.