சென்னை: தமிழகத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் 75 சதவீதம் பேர் ‘யூ-வின்’ செயலியில் பதிவு செய்து உள்ளனர், மீதம் உள்ளவர்களை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் உள்பட நோய்கள் வராமல் தடுக்க மொத்தம் 10க்கும் மேற்பட்ட வகையான தடுப்பூசிகள் போடப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு பல்வேறு நிலைகளில் உள்ள மருத்துவமனை மூலம் கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு தடுப்பூசி எந்த தேதியில், என்ன ஊசி போட வேண்டும் என்பது கடந்த காலங்களில் புத்தகம் அல்லது அட்டைகளில் எழுதி தரப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய அரசின் ‘யூ-வின்’ செயலி மூலமாக தடுப்பூசி சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. ‘யூ-வின்’ செயலியில் கர்ப்ப காலத்தில் பதிவு செய்து விட்டால் குழந்தை பிறந்து 16 வயது ஆகும் வரை தேவையான தடுப்பூசி எப்போது செலுத்த வேண்டும் என அனைத்து தகவலும் கிடைக்கும்.
மேலும் ஒரு தடுப்பூசி செலுத்திய பிறகு அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். அதேபோல, அந்த செயலியில் இருந்து கைபேசி எண்ணுக்கு தடுப்பூசி தவணையை நினைவூட்டி குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
தமிழகத்தில் இதன் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. இது அனைத்து மக்களுக்கு சென்று அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சுகாதார பணியாளர்கள் இத்திட்டத்தை செயல்படுத்த முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த ‘யூ-வின்’ செயலி மூலம் பொதுமக்களின் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் 75 சதவீதம் கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்து விட்டனர். மீதம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பிணை பயன்படுத்திகொள்ள வேண்டும். சுகாதார பணியாளர்கள் மூலம் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ‘யூ-வின்’ செயலி குறித்து அறிவுறுத்த உத்தவிட்டு இருக்கிறோம். மேலும் ஒரு குழந்தைக்கு அல்லது கர்ப்பிணிக்கு ஒரு தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் ‘யூ-வின்’ செயலி தெரிய வரும், உடனடியாக சுகாதார பணியாளர்கள் வீட்டு சென்று தடுப்பூசி செலுத்த அறிவுறுத்துவார்கள் அது மட்டுமின்றி, இதன் மூலம் தடுப்பூசி இருப்பு குறித்த தகவல் எங்களுக்கு கிடைக்கும். எனவே தேவை இல்லாமல் தடுப்பூசி வீணாகாமல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கர்ப்பிணி தாய்மார்கள் 75 சதவீதம் பேர் ‘யூ-வின்’ செயலியில் பதிவு: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.
