மாமல்லபுரம், மார்ச் 13: சர்வதேச அளவில் மாமல்லபுரம் சுற்றுலா தலம் புகழ் பெற்று விளங்கி வருகிறது. இங்குள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 10 பேர் கொண்ட கண் பார்வையற்ற குழுவினர் நேற்று காலை சொகுசு பேருந்து மூலம் மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்கள் நேற்று மதியம் ஐந்து ரதம் வந்தனர். அவர்களுடன் வந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சிற்பங்கள் எந்த காலத்தில் எந்த மன்னரால் செதுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தகவல்களை தெளிவாக விளக்கினார்.
தொடர்ந்து, ஐந்து ரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்களுக்கு அருகில் அமர்ந்து சிற்பங்களை தொட்டு பார்த்தும், தங்களது கைகளால் தட்டி அதன் ஓசையை காதில் கேட்டும் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, சிற்பங்கள் குறித்து விளக்கிய சுற்றுலா வழிகாட்டியிடம் பல்லவ மன்னர்கள் செதுக்கிய சிற்பங்களை எங்களால் தொட்டு தான் பார்க்க முடிந்தது. பார்வை இல்லாததால் எங்களால் இதன் அழகை கண்டு ரசிக்க முடியவில்லை என வருத்தத்துடன் கூறியதை காணமுடிந்தது.
The post புராதன சின்னங்களை தொட்டு பார்த்து பார்வையற்ற பிரான்ஸ் பயணிகள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.
