×

திருவள்ளூரில் நாளை ஒன்றிய அரசுக்கு எதிராக முதல்வர் பங்கேற்கும் கூட்டத்துக்கு அலைகடலென திரண்டு வாரீர்: மாவட்ட செயலாளர்கள் அழைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ மற்றும் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் தமிழ்நாட்டையும்தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்துவரும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டு அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் மோடி அரசின் அநீதியை மக்களிடம் கொண்டு சென்று அதன் பேராபத்தை எடுத்துக்கூற வேண்டும். தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்பட போகும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கை குழு”வை அமைத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், 7 மாநிலங்களை சேர்ந்த 20 கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதன்தொடர்ச்சியாக திமுக சார்பில் ‘’தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்” என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நாளை திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். ஒன்றிய அரசு செய்யும் அநீதிகளை எதிர்த்து முதல் குரல் கொடுப்பது இந்தியாவிலேயே ஒரே முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர்தான். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு பிரச்னை இருந்தாலும் போராட்டத்தில் முதலில்இருப்பதும் திமுகதான். ஒன்றிய அரசின் அநீதிகளை மோடியின் செவியில் கேட்கும் அளவிற்கு நமது கண்டனங்களை தெரிவித்து போராட்டத்தை வெற்றி பெற செய்யவேண்டும்.

பாஜக ஆளாத மாநிலங்களை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து எழுப்பப்படும் உரிமைக் குரல், எப்போதும் தமிழ்நாட்டில் இருந்துதான் முதலில் ஒலிக்கும். அப்படித்தான் இப்போதும் கள நிலவரம் இருக்கிறது. அதிலும் சிறப்பம்சமாக திமுக சார்பாக தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெற்றாலும் அதற்கு தலைமையாய் திருவள்ளூரை தேர்வு செய்து, நம்முடைய கழகத்தினருடனும், மக்களுடனும் சேர்ந்து முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு எதிராக ஜனநாயக குரலை எழுப்ப இருப்பது நமக்கான பெருமை. ஆகையால் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் நாளை மாலை 4.30 மணி அளவில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

The post திருவள்ளூரில் நாளை ஒன்றிய அரசுக்கு எதிராக முதல்வர் பங்கேற்கும் கூட்டத்துக்கு அலைகடலென திரண்டு வாரீர்: மாவட்ட செயலாளர்கள் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : District Secretaries ,EU government ,Thiruvallur ,THIRUVALLUR UNIFIED DISTRICT SECRETARIES ,MINISTER ,AVADI SA. M. Nassar ,Thiruthani S. Chandan ,MLA ,Vallur ,M. S. K. Ramesh Raj ,Tamil Nadu ,India ,Uddhav Thackeray ,PM ,Dinakaran ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...