வேலூர், பிப்.18: காட்பாடியில் அரசு பஸ்சில் 12 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். வேலூர் மதுவிலக்கு போலீசார் எஸ்ஐ விக்னேஷ் தலைமையில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருப்பதி-சேலம் அரசு பஸ்சில் சோதனை நடத்தினர். இதில் பஸ்சில் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த ஒருவரிடம் நடத்திய சோதனையில் அவரது பையில் தலா 2 கிலோ கொண்ட 6 பண்டல்களாக கட்டப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவையும், செல்போனையும் கைப்பற்றினர். கஞ்சாவை பஸ்சில் கடத்தி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னி தாலுகா வட்டம்குளம் கிராமம் கான்ஹிரங்கட் பகுதியை சேர்ந்த முகமதுபஷீர்(46) என்பதும், இவர் தொடர்ந்து ஆந்திராவில் இருந்து கஞ்சாவை பஸ், ரயில் மூலம் கேரளாவுக்கு கடத்தி விற்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்யப்பட்ட முகமதுபஷீரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரசு பஸ்சில் 12 கிலோ கஞ்சாவுடன் ஆசாமி கைது மதுவிலக்கு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.
