×

அழகாக போட்டோ எடுப்பதாக அழைத்து சென்று அறையில் கட்டிப்போட்டு விடிய விடிய 28 மாணவிகள் பாலியல் பலாத்காரம்: விடுதி நிர்வாகி, 2வது மனைவி, மருமகளுக்கு வலை

திருமலை: ஆந்திராவில் அழகாக போட்டோ எடுப்பதாக அழைத்து சென்று 28 மாணவிகளை கட்டிப்போட்டு விடிய விடிய பலாத்காரம் ெசய்த விடுதி நிர்வாகி, அவருக்கு உடந்தையாக இருந்த 2வது மனைவி மற்றும் மருமகளுடன் தலைமறைவானார். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் ஏலூரில் மாணவிகள் தங்கும் தனியார் விடுதி உள்ளது. யர்ரகுண்டப்பள்ளியை சேர்ந்த சசிகுமார்(52) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார். இவரது 2வது மனைவி பனி. இவர் விடுதி வார்டனாகவும், மருமகள் பாதுகாவலராகவும் உள்ளனர். இந்த விடுதியில் ஏலூர் மாவட்டத்தை சேர்ந்த 3ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் 45 மாணவிகள் தங்கியுள்ளனர்.

சசிகுமார் போட்டோ ஸ்டுடியோவும் வைத்துள்ளார். அவ்வப்போது இரவில் விடுதிக்கு வரும் சசிகுமார், மாணவிகள் தங்கியுள்ள அறைகள் அருகே நின்றுகொண்டு புகை பிடித்தபடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவாராம். இதை மாணவிகள் வெளியே சொல்லாமல் அச்சத்தில் இருந்துள்ளனர். கடந்த 15ம்தேதி அங்குள்ள 3 சிறுமிகளிடம் பேசிய சசிகுமார், `உங்களை அழகாக போட்டோ எடுக்கிறேன், என்னுடன் வாருங்கள்’ என வற்புறுத்தி காரில் அழைத்துச்சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு சிறுமிகளின் கை, கால்களை கட்டி விடியவிடிய பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் அந்த சிறுமிகளை விடுதிக்கு கொண்டு சென்றுவிட்டுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கடந்த 2 நாட்களாக கடும் மன உளைச்சலுடன் இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இரண்டாவது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஏலூர் டிஎஸ்பி ஷ்ரவன்குமார் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு சென்று ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். அங்குள்ள அனைவரையும் அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். சிறுமிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்து, யார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என டிஎஸ்பி தெரிவித்தார். மேலும் அங்கு பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. அங்குள்ள சிறுமிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை பலரை காரில் அழைத்துச்சென்று கை, கால்களை கட்டி சசிகுமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. ஆனால் அவரது மிரட்டலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் அவர்கள் இருந்துள்ளனர். இதுதொடர்பாக போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிந்து சசிகுமாரை தேடிவருகின்றனர்.

இதுதொடர்பாக நிருபர்களுக்கு டிஎஸ்பி அளித்த பேட்டி: விடுதியை அனுமதியில்லாமல் நடத்தி வந்துள்ளனர். சசிகுமார் மீது அங்குள்ள 28 மாணவிகளும் தனித்தனியாக புகார் அளித்தனர். தற்போது நடத்திய விசாரணையில் கடந்த 4 மாதங்களில் மொத்தம் 28 மாணவிகளை காரில் அழைத்துச்சென்று கை, கால்களை கட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அறை பூட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கிறோம். தப்பிய சசிகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது 2வது மனைவி மற்றும் மருமகள் ஆகியோரையும் தேடிவருகிறோம். இவ்வாறு கூறினார்.

The post அழகாக போட்டோ எடுப்பதாக அழைத்து சென்று அறையில் கட்டிப்போட்டு விடிய விடிய 28 மாணவிகள் பாலியல் பலாத்காரம்: விடுதி நிர்வாகி, 2வது மனைவி, மருமகளுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Vidiya Baladkaram ,Andhra Pradesh ,Andhra State ,
× RELATED மழை வெள்ளத்திற்கு பயந்து தலைநகரை...