×

வீட்டிலிருந்தே அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுவையில் 6 பேரிடம் ₹28.79 லட்சம் மோசடி

புதுச்சேரி, செப். 7: வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுவையில் 6 பேரிடம் ரூ.28.79 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றி உள்ளது. புதுவை புதுசாரம் பகுதியை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரை மர்ம நபர் தொடர்புகொண்டு ஆன்லைனில் கொடுக்கப்படும் சிறு பணிகளை முடித்து வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதைநம்பி அஷ்ரப் மர்ம நபருக்கு ரூ.22.21 லட்சத்தை அனுப்பி, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துள்ளார். இதில் அவர் சம்பாதித்த பணத்தை எடுக்க முடியாமல் இருந்தது. இதையடுத்து அவர் மர்ம நபரை தொடர்புகொள்ள முயன்றபோது, பதில் அளிக்கவில்லை. அதன்பிறகே அஷ்ரப் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.மேலும் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரை மர்ம நபர் தொடர்புகொண்டு எஸ்.பி.ஐ இன்டர்நேஷனல் பங்குசந்தை செயலியில், எவ்வாறு பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதைநம்பி பொன்னுசாமி மர்ம நபர் அனுப்பிய லிங்க் மூலம் ரூ.2.80 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

இதேபோல் லாஸ்பேட்டையை சேர்ந்த சரவணன் என்பவர் ரூ.1.74 லட்சத்தை போலி பங்குசந்தை செயலியில் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். மூலகுளம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரை மர்ம நபர் தொடர்புகொண்டு மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார். அப்போது தங்கள் பெயரில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பின்னர் இதிலிருந்து தப்பிக்க ரூ.1.45 லட்சத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.புதுவையை சேர்ந்த சஞ்சீவ் குமார் ரூ.36 ஆயிரம், வில்லியனூரை சேர்ந்த நெடுஞ்சேரலாதன் என்பவர் ரூ.23 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். மேற்கூறிய 6 பேர் மொத்தமாக ரூ.28.79 லட்சத்தை ேமாசடி கும்பலிடம் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டிலிருந்தே அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுவையில் 6 பேரிடம் ₹28.79 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Ashraf Ali ,Puducharam ,Dinakaran ,
× RELATED புதுவையில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது