×

லஞ்சம் வாங்கிய ஊர் நல அலுவலருக்கு ஓராண்டு சிறை

 

கடலூர், செப். 11: லஞ்சம் வாங்கிய ஊர் நல அலுவலருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா, குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில், கடந்த 2011ம் ஆண்டு மல்லிகா (63) என்பவர் ஊர்நல அலுவலராக பணிபுரிந்தார். அப்போது சிதம்பரம் தாலுகா அம்மாபேட்டை, மேட்டுத்தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் (78) என்பவர், தனது மகளுக்கு திருமண நிதி உதவி கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.

அதற்கு ஊர் நல அலுவலர் மல்லிகா ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் கலியபெருமாள் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்ததன் பேரில், கடந்த 2.11.2011ல் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலியபெருமாள், ரூ.1000 லஞ்சம் கொடுத்த போது, மல்லிகாவை ஊழல் தடுப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

மேலும் மல்லிகா மீது கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி நாகராஜன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், மல்லிகா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 6000 ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பால ரேவதி ஆஜராகி வாதாடினார்.

The post லஞ்சம் வாங்கிய ஊர் நல அலுவலருக்கு ஓராண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore court ,Mallika ,Kattumannarkovil Taluk, ,Kumaratchi Panchayat Union ,Cuddalore District ,
× RELATED குப்பை கிடங்கில் தீ விபத்து