×

மகன், சகோதரருடன் சேர்ந்து கணவனை அடித்து கொன்ற மனைவி

மங்கலம்பேட்டை, செப். 14: மங்கலம்பேட்டை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை, மகன் மற்றும் சகோதரருடன் சேர்ந்து மனைவி அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே எடைச்சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (51). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த செண்பகம் என்பவருக்கும் திருமணமாகி, பரமேஸ்வரி(24) என்ற மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதனிடையே தட்சிணாமூர்த்தி உள்ளூரில் உள்ள வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு தினமும் குடித்துவிட்டு வந்து, தனது மனைவி செண்பகத்திடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகில் உள்ள மோட்டார் கொட்டகையில் வைத்து, குடிபோதையில் தகராறு செய்த தட்சிணாமூர்த்தியை அவரது மனைவி செண்பகம்(40), மகன் மற்றும் செண்பகத்தின் அண்ணன் பாலமுருகன்(46) ஆகிய மூவரும் சேர்ந்து, கட்டை மற்றும் பிவிசி பைப்பால் சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு கொண்டு வந்து, கொடூரமாக தாக்கிவிட்டு, உள்ளே வைத்து பூட்டிவிட்டு, செண்பகத்தின் அண்ணன் வீடான பாலமுருகனின் வீட்டிற்குச் சென்று படுத்துள்ளனர்.இந்நிலையில் நேற்று காலை செண்பகம் தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது தட்சிணாமூர்த்தி இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மங்கலம்பேட்டை காவல்துறையினர் மற்றும் விருத்தாசலம் டிஎஸ்பி கிரியா சக்தி, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் விரைந்து வந்து வீட்டிற்குள் சடலமாக கிடந்த ட்சிணாமூர்த்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுசம்பந்தமாக தட்சிணாமூர்த்தியின் மனைவி செண்பகம், 16 வயது மகன் மற்றும் பாலமுருகன் ஆகிய மூவரையும் கைது செய்து, சிறையிலடைத்தனர். இச்சம்பவம் மங்கலம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மகன், சகோதரருடன் சேர்ந்து கணவனை அடித்து கொன்ற மனைவி appeared first on Dinakaran.

Tags : Mangalampet ,Dakshinamurthy ,Utachichitur ,Mangalampet, Cuddalore district.… ,
× RELATED மு.பரூர் வரதராஜபெருமாள் கோயிலில் மாடுகள் கட்டுவதால் சுகாதார சீர்கேடு