×

ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார் என்றால் புல்டோசர் ஏவிவிட்டு அவரது வீட்டை எப்படி இடிக்கலாம் ? : உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி :ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார் என்றால் அவரது வீட்டை எப்படி இடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினரின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு வினவியுள்ளது. புல்டோசர் கொண்டு வீடுகளை இடிப்பதை எதிர்த்து ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத்கான், ம.பி.யை சேர்ந்த முகமது ஹீசைன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பழிவாங்கும் நடவடிக்கையாகவே வீடுகள் இடிக்கப்படுவதாக மனுக்களில் அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு விசாரித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளில் குற்றம்சாட்டப்படும் நபர்களின் வீடுகள், சொத்துகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பிறப்பித்த உத்தரவில்,”ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார் என்றால், அவரது வீட்டை எப்படி இடிக்கலாம்? அவர்
தண்டனை பெற்றவராக இருந்தாலும் அவரது வீட்டை சட்டத்துக்கு புறம்பாக இடிக்கக் கூடாது.குற்றச்செயலில் ஈடுபட்டவர் என்பதாலேயே அவரது வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பதை அனுமதிக்க முடியாது.

குற்ற வழக்கில் எதிரியாக சேர்க்கப்பட்டதாலேயே ஒருவரது வீட்டை எப்படி இடிக்கலாம்?. சட்ட விரோத கட்டுமானங்களை நாங்கள் பாதுகாக்கவில்லை. அதேவேளையில், அவ்வகை சொத்துகளை அகற்றும் விதிகளை பின்பற்ற வேண்டும்.நாடு முழுவதும் வீடுகளை இடிப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்து மனுதாரர்கள் விளக்கமான பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு செப்டம்பர் 17-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

The post ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார் என்றால் புல்டோசர் ஏவிவிட்டு அவரது வீட்டை எப்படி இடிக்கலாம் ? : உச்சநீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,DELHI ,BJP ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...