×

காதல் மனைவியை கொன்ற வாலிபரை காவலில் விசாரிக்க நடவடிக்கை

 

புதுச்சேரி, ஆக. 27: புதுச்சேரியில் அலைபாயுதே பட பாணியில் வாழ்ந்த காதல் மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொலை செய்த வாலிபரை காவலில் விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே கொலையுண்ட இளம்பெண்ணின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (27). போட்டோகிராபரான இவர் அதே பகுதியை சேர்ந்த அபூர்வா (22) என்பவரை காதலித்து கடந்த 10.2.2023 அன்று இரு வீட்டாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் \”அலைபாயுதே\” திரைப்பட பாணியில் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு அவ்வப்போது வெளியே சந்தித்து பேசி வந்துள்ளனர். மேலும் முறைப்படி திருமணம் நடக்கும் வரை இதே நிலையை தொடர இருவரும் முடிவெடுத்திருந்தனர். இந்நிலையில் பிரதீப் தனது காதலி அபூர்வாவுடன் சுப்பராயப்பிள்ளை வீதியிலுள்ள தனியார் விடுதியில் கடந்த 17ம்தேதி இரவு அறை எடுத்து தங்கியிருந்த நிலையில் 20ம்தேதி இரவு அபூர்வாவை தோளில் சுமந்தபடி லாட்ஜ் மாடி அறையில் இருந்து பிரதீப் கீழே இறங்கியுள்ளார். இதைப் பார்த்த விடுதி பணியாளர் கார்த்திக் (30), பிரதீப்பிடம் என்ன நடந்தது? என கேட்டபோது, அபூர்வா மயங்கி விழுந்து விட்டதாக கூறவே, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்கு சென்று கார்த்திக் பார்த்தபோது, அபூர்வா முகம் முழுவதும் காயம் இருப்பது தெரியவரவே, விடுதிக்கு திரும்பி வந்து பிரதீப்பிடம் இதுபற்றி விசாரித்துள்ளார். அப்போது அபூர்வா வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் தாக்கியதாக கூறவே அதிர்ச்சியடைந்த கார்த்திக், சம்பவம் பற்றி விடுதி மேலாளரிடம் தெரிவித்து விட்டு, பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்குபதிந்து பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அபூர்வா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றியமைத்த போலீசார், அபூர்வாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து தாயார் சுதாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் வம்பாகீரப்பாளையத்துக்கு அபூர்வாவின் உடலை எடுத்துச் சென்ற உறவினர்கள், இறுதிச்சடங்கு செய்தனர். இதனிடையே போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தன்னை விடுத்து வேறொரு நபருடன் அபூர்வா பேசியதால் ஆத்திரமடைந்த பிரதீப், காதலியின் முகத்தில் சரமாரி தாக்கியதோடு, அவரது முகத்தை விடுதி அறையின் சுவற்றில் தலைமுடியை பிடித்து அடித்து காயப்படுத்தியது தெரியவந்தது.

மேலும் கொலைக்கான முழு காரணமும் தெரியாத நிலையில் தொடர்ந்து 2 பேரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொலை முயற்சி வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதீப்பை, கொலை வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க கிழக்கு எஸ்பி லட்சுமி சவுதன்யா உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து பெரியகடை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக புதுச்சேரி நீதிமன்றத்தில் 3 நாள் காவல் விசாரணைக்கு அனுமதி கேட்டு முறையிட உள்ளனர். காவல் விசாரணை முடிவில்தான், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றாரா அல்லது சம்பவத்தன்று விடுதியில் வேறு அசம்பாவிதம் ஏதும் நடைபெற்றதா? என்பதற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post காதல் மனைவியை கொன்ற வாலிபரை காவலில் விசாரிக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED பெங்களூரு, நாமக்கல் அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது