×

பயிற்சியாளர்களை மட்டும் நம்பி இருந்தால் முழுத்திறமையை வெளிப்படுத்த முடியாது: இளம் வீரர்களுக்கு அஸ்வின் எச்சரிக்கை

சென்னை : இளம் வீரர்கள் பயிற்சியாளர்களை மட்டுமே நம்பி இருந்தால் அது ஆபத்தையே கொடுக்கும் என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் என்று ஒருவர் இல்லாத சூழல் தான் இருக்கும். ஒவ்வொரு அணிக்கும் மேலாளர் மட்டும் தான் இருப்பார். அணியின் போக்குவரத்து மற்றும் தங்கும் இடம் உணவு போன்ற விஷயங்களில் மட்டுமே அந்த மேலாளர் கவனம் செலுத்துவார். தேவைப்பட்டால் வீரர்களுக்கு அவ்வப்போது சின்ன சின்ன நுணுக்கங்களை அவர் வழங்குவார். இப்படித்தான் இந்திய அணி 1983ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரை வென்றது. ஆனால் காலம் மாற மாற பயிற்சியாளர் என்ற பதவி கிரிக்கெட்டுக்குள் நுழைந்தது. பேட்டிங்கிற்கு பயிற்சியாளர், பந்துவீச்சுக்கு ஒரு பயிற்சியாளர், பீல்டிங்க்கு என தனிப் பயிற்சியாளர், மனதை திடமாக, வலிமையாக வைத்துக் கொள்ள மற்றொரு பயிற்சியாளர், உடற்பயிற்சிக்கு தனிப் பயிற்சியாளர் என பல பயிற்சியாளர்கள் தற்போது வந்து விட்டார்கள்.

இன்னும் சில வீரர்கள் தனியாக சில பயிற்சியாளர்களை வைத்து கிரிக்கெட் பயிற்சிகள் மற்றும் நுணுக்கங்களை கற்று வருகிறார்கள். இத்தகைய சூழலில் தான் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், பல கிரிக்கெட் வீரர்கள் தற்போது பயிற்சியாளரை நம்பியே கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். இது நிச்சயம் ஒரு ஆபத்தான அணுகுமுறையாகவே நான் கருதுகிறேன். எப்போதும் யாரையும் சார்ந்து நாம் இருக்கக் கூடாது. தொடர்ந்து ஒருவரை சார்ந்தே நீங்கள் விளையாடி வரும் பட்சத்தில் உங்களுக்கென்று புதிய யோசனைகள் எதுவும் வராது. பயிற்சியாளர் பல அறிவுரைகளையும், பல்வேறு வழிகளையும் வீரர்களுக்கு சொல்லிக் கொடுப்பார். அந்த அறிவுரைகளும், வழிகளும் ஒரு வீரருக்கு சரியாக பொருந்துகிறது என்றால் அது மற்ற வீரருக்கும் பொருந்தும் என்பது கிடையாது.

தற்போது உள்ள நவீன கால கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடிக்காத விதி என்றால் ஒரு வீரருக்கு ஏதோ ஒரு யுக்தி சரியாக செயல்பட்டது என்றால், அதே யுக்தியை மற்ற கிரிக்கெட் வீரர்களும் பின்பற்ற வேண்டும் என பயிற்சியாளர்கள் வீரர்களை நிர்பந்திப்பது தான். கிரிக்கெட் வீரர்கள் தங்கள் முன் வீசப்படும் சவால்களுக்கு அவர்களாக முயன்று பதில் அளிக்க வேண்டும். நிச்சயமாக கிரிக்கெட் வீரர்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால் அவர்களை வாழ்க்கை முழுவதும் வழிநடத்த அனுமதிக்க கூடாது. நான் கிரிக்கெட் வீரராக இருந்தபோது டபுள்யூ வி ராமன் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.

பல புதிய விஷயங்களை வெளிப்படுத்த தூண்டு கோலாக இருந்தார். அவர் எனக்கு பல்வேறு வழிகளை காட்டினார். அதில் எந்த வழி சிறந்தது என்பதை நானே தான் தேர்ந்தெடுத்தேன். எனக்கு டபிள்யூ வி ராமன் பல உதவிகள் செய்தார். ஆனால் என்றும் நான் அவரை சார்ந்தே செயல்படவில்லை. உங்கள் விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு உங்களிடம் இல்லை என்றால், உங்களுக்கு நீங்களே கற்றுத் தர முடியவில்லை என்றால், நீங்கள் மற்றவரை சார்ந்து தான் இருக்க வேண்டும். அது மிகவும் ஆபத்தானது. இதற்காக பயிற்சியாளர்கள் இருக்கும் வீரர்கள் அவர்களே சார்ந்து விளையாடி சாதித்தது கிடையாதா என்று கேட்டால் நிச்சயமாக நான் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் அது உங்களின் முழு திறமையை வெளிக் கொண்டு வராது என்பது தான் உண்மை என்று அஸ்வின் கூறியுள்ளார்.

The post பயிற்சியாளர்களை மட்டும் நம்பி இருந்தால் முழுத்திறமையை வெளிப்படுத்த முடியாது: இளம் வீரர்களுக்கு அஸ்வின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ashwin ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அஸ்வினுக்கு ஸ்ரீகாந்த் அறிவுரை