×

மகன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி ₹2.40 கோடி கடன் சொத்துக்களை விற்றும் கடனை அடைக்க முடியாததால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை : ஆந்திர மாநிலத்தில் சோகம்

திருமலை: மகன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி ₹2.40 கோடி கடன் ஏற்பட்டு, அவற்றை சொத்துக்கள் விற்றும் அடைக்க முடியாததால் பெற்றோர் விஷம்குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் வேலுகோடு மண்டலம் அப்துல்லாபுரத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரரெட்டி(45). இவரது மனைவி பிரசாந்தி(39). இவர்களது ஒரே மகன் நிகில் ரெட்டி. பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படிக்க பெற்றோர்கள் சேர்த்தனர். ஒரே மகனை படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் கனவு கண்டனர். இதற்காக மகன் எப்போது பணம் கேட்டாலும் கொடுத்தனர். அந்த பணத்தை வைத்து நிகில் ரெட்டி ஆன்லைன் சூதாட்டத்துக்கு பழகிவிட்டார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்த நிலையில் ₹2.40 கோடி வரை கடன் ஏற்பட்டது. இதை அறிந்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சொத்து முழுவதையும் விற்றாவது கடனை அடைக்காவிட்டால் குடும்பத்தின் நற்பெயர் போய்விடும் என கடன்களை அடைக்க அப்துல்லாபுரத்தில் உள்ள பத்து ஏக்கர் நிலம், வீடு, விவசாய நிலம் ஆகியவற்றை மகேஸ்வர ரெட்டி தம்பதியினர் விற்றனர். ஆனாலும் கடன்கள் தீர்க்கப்படவில்லை.

மீதி கடனை அடைக்க கடன் கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுத்ததால் மாமியார் வீட்டில் கொடுத்த மூன்று ஏக்கர் நிலத்தையும் விற்க முடிவு செய்தனர். ஆனால் குறைவான விலைக்கு கேட்பதால் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மனமுடைந்த மகேஸ்வர ரெட்டி மற்றும் பிரசாந்தி தம்பதியினர் கடந்த 13ம் தேதி நள்ளிரவு அப்துல்லாபுரம் அருகே உள்ள தங்களது விவசாய நிலத்திற்கு சென்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

மறுநாள் 14ம் தேதி காலை அந்த வழியாகச் சென்ற விவசாயிகள் நிலத்தில் தம்பதி இறந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து ஆத்மகுரு டிஎஸ்பி ராமாஜிநாயக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இருவரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஆத்மகுரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து
விசாரித்து வருகின்றனர்.

The post மகன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி ₹2.40 கோடி கடன் சொத்துக்களை விற்றும் கடனை அடைக்க முடியாததால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை : ஆந்திர மாநிலத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Abdullapuram ,Velukodu Mandal, Nandiyala District, Andhra State… ,Andhra State ,
× RELATED வட ஆந்திராவில் மீண்டும் கனமழை...