×

ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது மருத்துவம், ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டிக்கு எதிராக போராட்டம்: இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்பு

புதுடெல்லி: மருத்துவம், ஆயுள்காப்பீடு மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டிக்கு எதிராக ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள். மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு வசூலிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை நீக்குமாறு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பலர் வலியுறுத்தினர். ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது என்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதற்கு சமம் என்று எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். இது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். அதில், ‘ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்ப பெறுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசீலியுங்கள்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்யக் கோரி மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் இந்தியா கூட்டணியை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் கலந்து கொண்டனர்.

திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தேசியவாதகாங்கிரஸ்(எஸ்பி பிரிவு) உள்பட அனைத்து எம்பிக்களும் பங்கேற்றனர். அவர்கள் ‘வரி பயங்கரவாதம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பேனரை கையில் ஏந்தியபடி மோடி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் மருத்துவம், ஆயுள் காப்பீடு பிரிமீயங்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

* பின்னோக்கு வரியை நீக்க தெலுங்கு தேசம் வலியுறுத்தல்
மக்களவையில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி எம்பி கிருஷ்ண தேவராயலு பேசுகையில்,’ நாட்டில் பல்வேறு தொழில்களில் உள்ள சவால்களை எதிர்கொள்ள வசதியாக ஒன்றிய அரசால் போடப்படும் பின்னோக்கு வரியை நீக்க வேண்டும். இந்த கோரிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிசீலிக்க வேண்டும்.

நிதியமைச்சகத்தின் அகராதியிலிருந்து நீக்கப்பட வேண்டிய ஒரு வார்த்தை, காலங்காலமாக நாம் கேட்டுக்கொண்டிருக்கும் பின்னோக்கு வரி. அரிசி ஏற்றுமதியாளர்களும் என்னிடம் வந்து, இந்த பின்னோக்கு வரி எங்கள் மீது அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றார்கள். நன்றாகச் செயல்படும் வணிகங்களில் இருந்து கொஞ்சம் பணம் சம்பாதிக்க இதைத் தொடர்ந்தால், இது வணிகம் செழிக்க அனுமதிக்காது. வணிக வளர்ச்சியை ஆதரிக்க அமைச்சர் இந்த வரியை நீக்க வேண்டும்’ என்றார்.

* ரூ.24,000 கோடி வசூலித்த மோடி அரசு ராகுல்காந்தி குற்றச்சாட்டு
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு ஜிஎஸ்டி வரியின் மூலம் ரூ.24,000 கோடியை சாமானிய மக்களிடம் மோடி அரசு வசூலித்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில்,’ ஒவ்வொருரின் வாழ்க்கையிலும் சந்திக்கக் கூடிய உடல் நலம் சார்ந்த பிரச்னைகளை தீர்க்க, மற்றொருவரின் முன்பு தலைகுனிய வேண்டியதில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பைசாவாக சேர்த்து மருத்துவ காப்பீடு கட்டணம் செலுத்தும் கோடிக்கணக்கான சாமானிய மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ. 24 ஆயிரம் கோடியை ஜிஎஸ்டி வரியின் மூலம் வசூலித்துள்ளது. ஒவ்வொரு பேரிடரிலும் ஒரு வரி வாய்ப்பை தேடுவது ஒன்றிய பாஜ அரசின் உணர்வற்ற சிந்தனைக்கு சான்றாக உள்ளது. இந்த சந்தர்ப்பவாத சிந்தனையை ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் எதிர்க்கிறது. ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களில் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். அவற்றை இலவசமாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* நாடாளுமன்ற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்த எதிர்ப்பு
நாடாளுமன்ற நுழைவு வாயிலில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் உறுப்பினர்கள் அவையில் நுழைய இடையூறாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது மருத்துவம், ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டிக்கு எதிராக போராட்டம்: இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,All India ,New Delhi ,MPs ,Parliament ,India Alliance ,Dinakaran ,
× RELATED வெளிநாடுகளில் இப்படி பேசுவது...