×

வெந்நீர் கொட்டி 2 குழந்தைகள் காயம் அங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்ட்

குடியாத்தம், ஜூலை 27: குடியாத்தத்தில் 2 குழந்தைகள் மீது வெந்நீர் கொட்டி காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டையில் தனியார் கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு 30 குழந்தைகள் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவை சமைத்தனர். அப்போது, அங்கன்வாடி பணியாளர் துர்கா என்பவர் தண்ணீர் எடுப்பதற்காக மைய கட்டிடத்தில் இருந்து வெளியே சென்றார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த வெந்நீர் கீழே கொட்டி அருகில் நின்று கொண்டிருந்த 2 குழந்தைகள் மீது பட்டது. இதனால் காயமடைந்த குழந்தைகள் இருவரும் அலறி துடித்தனர். அலறல சத்தம் கேட்டு ஓடி வந்த பணியாளர்கள் குழந்தைகளை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் ஆர்டிஓ சுபலட்சுமி, தாசில்தார் சித்ராதேவி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அதில், அங்கன்வாடி மையத்தில் சமையலறை தனியாக இல்லாமல், குழந்தைகள் அமரும் இடத்திலேயே உணவு சமைப்பது தெரியவந்தது. ெதாடர்ந்து, வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி, அங்கன்வாடி மைய கட்டிடம் மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். அதன்படி, அதே பகுதியில் உள்ள வேறொரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் அங்கன்வாடி மையம் நேற்று மாற்றப்பட்டது. இதற்கிடையில், கவன குறைவாக செயல்பட்ட அங்கன்வாடி பணியாளர் துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

The post வெந்நீர் கொட்டி 2 குழந்தைகள் காயம் அங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Gudiyattam ,Anganwadi Center ,Kudiatham Bichanurpet, Vellore District ,
× RELATED புதிய அங்கன்வாடி மையம் திறப்பு