×

பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

 

ஊட்டி, ஜூலை 17: ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள துரித உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மூலம் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பானிபூரி மற்றும் துரித உணவுகளை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர்.

மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் வசூலித்து வருகின்றனர். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் தலைமையிலான அலுவலர்கள் ஊட்டி, குன்னூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள பானிபூரி மற்றும் துரித உணவுகள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஊட்டியில் மூன்று கடைகளிலும், குன்னூரில் ஆறு கடைகளிலும் சுகாதாரமற்ற முறையில் பானி பூரி தயாரித்து விற்பனை செய்து தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘உணவுப் பொருள்களில் தேவையில்லாத ரசாயனம் மற்றும் நிறமிகளை கலப்படம் செய்யக்கூடாது. இதனால் உணவு சாப்பிடுவதில் உடல் நலத்திற்கு கேடு ஏற்படும். திடீர் ஆய்வு நடத்தி இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

The post பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : panipuri ,Ooty ,Food Safety Department ,Coonoor ,Panipuri, Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் நூடுல்ஸ்...