×

மாஜி அமைச்சர்கள் 6 பேர் திடீர் பரிந்துரை; ஓபிஎஸ், சசிகலாவை சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு: சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

சேலம்: சசிகலா மற்றும் ஓபிஎஸ்சை கட்சியில் ேசர்க்க மாஜி அமைச்சர்கள் 6 பேர் பரிந்துரைத்துள்ளனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிய நிலையில் அவர் அதிமுகவை கைப்பற்றினார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் நடந்த தேர்தல் அனைத்திலும் அதிமுக வெற்றி பெறவில்லை. இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்க்கும் பட்சத்தில் தென்மாவட்டங்களில் அதிமுக வலுப்பெறும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால், ஓ.பிஎஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேசமயம் ஓ.பன்னீர்செல்வமோ அதிமுகவில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, ‘ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி. விசுவாசமாக இருந்ததாக வரலாறே கிடையாது’ என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஓபிஎஸ், ‘என்னுடைய விசுவாசத்தை பற்றி ஜெயலலிதாவே கூறி உள்ளார். அது அனைவருக்கும் தெரியும். என்னுடைய விசுவாசத்தை பற்றி எடப்பாடிக்கு பேச அருகதை இல்லை. விரைவில் அனைவரும் ஒன்றிணைவோம்’ என்று கூறினார். இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சந்தித்து பேசினர். அவர்களின் ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்துள்ளது. அப்போது கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்து விவாதித்ததாக தெரிகிறது.

ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்ப்பதன் மூலம் கட்சி வலுப்பெற வாய்ப்புள்ளதாக மாஜி அமைச்சர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி சசிகலா மற்றும் ஓபிஎஸ்சை சேர்க்க திட்டவட்டமாக மறுத்து விட்டாராம். இவர்களை தவிர கட்சியில் இருந்து வெளியேறிவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் சேர்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஓபிஎஸ் பற்றி எடப்படி பேசும்போது, ‘கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியதுடன், இரட்டை இலைக்கு எதிராக அவர் போட்டியிட்டு விட்டார். இனி அவரை சேர்க்க முடியாது. இந்த விவகாரத்தை தவிர கட்சி வளர்ச்சிக்கு வேறு எதைப்பற்றியும் பேசுங்கள்’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த விவகாரம் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மாஜி அமைச்சர்கள் 6 பேர் திடீர் பரிந்துரை; ஓபிஎஸ், சசிகலாவை சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு: சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,OPS ,Sasikala ,Salem ,Jayalalitha ,AIADMK ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் காவல்துறையினர் உள்பட...