நெல்லை: கோடை காலத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. சென்னை தாம்பரம் – திருவனந்தபுரம் – கொச்சுவேலி இடையே வாரம் இரு தடவை கோடைகால விடுமுறை சிறப்பு ரயில்களை விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, விருதுநகர், செங்கோட்டை, புனலூர், கொல்லம் வழியாக இரு வழிகளிலும் இயக்கவுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.45 மணிக்கு திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமார்க்கமாக வெள்ளி, ஞாயிறு தினங்களில் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு சனி, திங்கள் கிழமைகளில் காலை 4.15க்கு தாம்பரம் ரயில் நிலையத்தை இந்த ரயில் சென்றடையும். இந்த ரயில்கள் வரும் 16ம்தேதி முதல் ஜூன் 29ம்தேதி வரை தாம்பரத்திலிருந்தும், வரும் 17ம்தேதி முதல் ஜூன் 30ம்தேதி வரை திருவனந்தபுரம் கொச்சுவேலியிலிருந்தும் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது. 14 மூன்றடுக்கு ஏசி எகானமி எல்எச்பி பெட்டிகளோடு இந்த ரயில்கள் இயங்க உள்ளன. இந்த ரயிலுக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
The post தாம்பரத்தில் இருந்து செங்ேகாட்டை வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.