கிருஷ்ணகிரி: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், 18 முதல் 35 வயது வரை உள்ள 8ம் வகுப்பு படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த ஊக்கத் தொகையுடன் கூடிய இலவச தையல் பயிற்சியை வழங்கி வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி யு.டி.ஐ., டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து, 45 நாட்கள் இலவச தையல் பயிற்சி நேற்று தொடங்கியது. இப்பயிற்சியை மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு, பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன்படி, பெண்கள் வேலை வாய்ப்பை பெற தற்போது, 45 நாட்கள் இலவச தையல் பயிற்சியை வழங்குகிறது. இப்பயிற்சி முடிந்து நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றது. இச்சான்றிதழை வைத்து இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பை பெறலாம். அல்லது சுயமாகவும் தொழில் துவங்கி வெற்றி பெறலாம். மாவட்ட தொழில் மையத்தை அணுகினால் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
The post ஊக்கத்தொகையுடன் இலவச தையல் பயிற்சி appeared first on Dinakaran.