×

தா.பழூர் அருகே கோடாலி கருப்பூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய 50 மாடுகளை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள்-போதிய வெளிச்சம் இல்லாததால் நிறுத்தி வைப்பு

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் தங்களது கால்நடைகளை அருகிலுள்ள கொள்ளிட ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்பி பின்னர் வீட்டுக்கு ஓட்டி வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்ற 50க்கும் மேற்பட்ட பசுமாடுகள் கொள்ளிட ஆற்றின் மணல்திட்டு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. இதனிடையே தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கொள்ளிட ஆற்றின் ஒரு லட்சம் கனஅடி நீர் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகள் திரும்பி கரைப்பகுதிக்கு வராமல் அங்கேயே தங்கி விட்டது. நாளுக்கு நாள் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதாலும், மேலும் இன்னும் சில தினங்களில் அதிக அளவில் கனமழை பெய்யும் என்று வானிலை அறிக்கை தகவல் தெரிவித்ததால், இதில் அச்சமடைந்த விவசாயிகள் கரை பகுதியில் சிக்கித் தவிக்கும் மாடுகளை மீட்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் இது பற்றி தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேற்று மாலை 5 மணி அளவில் கொள்ளிடம் கரைப்பகுதிக்கு சென்று நீர் மோட்டார் பொருந்திய படகு மூலம் மாடுகள் இருக்கும் மணல் திட்டு பகுதிக்கு விவசாயிகளை அழைத்து சென்றனர். பின்னர் அங்கு சென்ற தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் அங்குள்ள மாடுகளை சத்தம்போட்டு ஆற்றில் இறங்கி கரை பகுதிக்கு ஓட்டிச்செல்ல முயற்சித்தனர். அப்போது பாதி தூரம் வந்த மாடுகள் அனைத்தும் திரும்பி மேய்ச்சல் பகுதி உள்ள கரைப் பகுதிக்கு சென்றது. இந்த போராட்டம் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. நீண்டநேரம் தீயணைப்புத்துறையினர் போராடியும் மாடுகள் கரை பகுதிக்கு வரவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு துறை ஆய்வாளர் அம்பிகா மீட்பு பணியில் தீவிரம் காட்டினார். இரவு நேரமாகிவிட்டதால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் அனைவரும் மீண்டும் கரைப் பகுதிக்கு படகு மூலம் வந்தடைந்தனர். இருப்பினும் பகல் பொழுதில் எப்படியும் மாடுகளை மீட்போம் என தீயணைப்புத் துறையினர் விவசாயிகளிடம் நம்பிக்கை தெரிவித்தனர். சம்பவ இடத்தில் வருவாய் ஆய்வாளர் தமிழரசன், கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் ஆகியோர் மாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்….

The post தா.பழூர் அருகே கோடாலி கருப்பூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய 50 மாடுகளை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள்-போதிய வெளிச்சம் இல்லாததால் நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Kollidam River ,Kodali Karuppur village ,Tha Bhaur ,Tha.Pazhur ,Kodalikaruppur ,Ariyalur district ,
× RELATED ஆற்றில் மணல் திருடியவர் கைது