×

பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு

நன்றி குங்குமம் தோழி

அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டன் என்ற 77 வயது பெண்மணிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு ‘தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்குகள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக’ என்ற தலைப்பிலான ஆய்விற்காக கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 200 ஆண்டுகளாக பெண்களின் வாழ்வாதாரம், கல்வி, பொருளாதாரம் எந்தளவிற்கு முன்னேறியுள்ளது என்பதுதான் இவருடைய ஆய்வு. இந்த ஆய்வில் பெண்களின் போராட்டங்கள், அவர்களுக்கான உரிமைகள், எப்படியெல்லாம் கிடைத்தது என்பது வரை ஆய்வுக்கு உட்படுத்தி எழுதியிருக்கிறார். முக்கியமாக இவருடைய ஆய்வு வளர்ந்த நாடான அமெரிக்காவை மையப்படுத்திதான் அமைந்திருக்கிறது.

கிளாடியா தன் ஆய்வில் பெண்களின் நிலையை பலவாறாக விவரித்துள்ளார். அதன்படி 19ம் நூற்றாண்டின் இறுதியில்தான் பெண்களுக்கான சொத்துரிமை என்பதே கிடைத்துள்ளது. 1911ல் பெண்களால் அவர்களுடைய உரிமைகள் சார்ந்த போராட்டங்கள் தொடங்கப்பட்டன. இந்த போராட்டங்கள் வலுவடையவே பல பெண்களும் கல்வி கற்க தொடங்கி, வேலை நோக்கி நகர்ந்துள்ளனர். ஆனால் அங்கு சம ஊதியம் என்பது இல்லாமல் இருந்தது. 1960களின் பிற்பகுதியிலும் ஆரம்ப காலத்திலும் கல்வி மற்றும் வேலைக்கு சேர்வது பெண்களின் உரிமைகள் சார்ந்து பேசுவது என்பது கணிசமாக உயர்ந்துள்ளது.

1963-ம் ஆண்டில் சம ஊதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம் என்பது நடைமுறைக்கு வந்தது. இதில் ஆண்களுக்கு சமமாக பெண்கள் வேலை செய்வதை ஏற்காதவர்கள் பெண்களிடம் பாகுபாடுகள் காட்ட தொடங்கினர். இதனால் அடுத்த ஆண்டே நிறுவனங்கள், பெண்களை பாகுபாடு காட்டாமல் நடத்த வேண்டும் என்கிற சட்டம் அமலுக்கு வந்தது. பெண்கள் பணியிடங்களில் பாகுபாடுகள் காட்டப்படாமல் இருப்பதை உத்தரவாதப்படுத்தியது இந்த சட்டம். இதனால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்கு செல்லத் தொடங்கினர்.

1970 வாக்கில், பெரும்பான்மையான அமெரிக்கர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் சுமார் 85% கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள், திருமணமான பெண் வேலை செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்கிற நிலைமை இருந்தது. பெண்கள் பொருளாதார ரீதியாக வளரத் தொடங்கிய காலகட்டமாக இதை பார்க்கலாம். வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள் என இரண்டையும் சமாளித்தாலும் பெண்களை வேலைகளில் இருந்து வெளியேற்றியது என்றால் அது கர்ப்ப கால நாட்கள் தான். நிறுவனங்கள் திருமணமாகாத பெண்களைதான் அதிகமாக வேலைக்கு எடுத்தது. இதில் சிலரையும் திருமணம் ஆன பின்னரும் நிறுவனங்கள் வேலைக்கு வைத்திருந்தன.

கல்யாணத்திற்கு பிறகான நாட்களில் முக்கியமாக கர்ப்ப காலங்களுக்கு பிறகு பெண்களை வேலைக்கு சேர்த்துக் கொள்வதில்லை. இதனால் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய தேவைகளுக்கும் அவர்களுடைய கணவர்களைதான் சார்ந்திருக்க வேண்டியதானது. 1978ம் ஆண்டு கர்ப்ப பாகுபாடு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் கர்ப்ப காலம் முடிந்து பெண்கள் அவர்கள் வேலை செய்த நிறுவனங்களில் வேலை செய்யும் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. இந்த சட்டங்கள் வழியாக அமெரிக்கப் பெண்கள் சொத்தை சொந்தமாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பாத்தியத்தை வைத்துக் கொள்ளவும், சட்டப்பூர்வமாக அதை எழுதி கொடுக்கவும் உரிமை பெற்றனர்.

இந்த ஆண்டுகளில் வந்த அரசுகளும் பெண்களின் கோரிக்கைகளை மையப்படுத்திதான் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டன. இதிலும் நான்கு நிலைகளில் பெண்கள் போராட்டங்களை வகைப்படுத்தலாம். முதலாவது பணியிடங்களில் வேலை பாதுகாப்பு மற்றும் வேலை செய்வதற்கான பணி பாதுகாப்பு. இது பொருளாதார ரீதியாக பெண்களை வலுப்படுத்தியது. ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கு வழங்கப் பட்டன. அதே போல விவாகரத்து, திருமண சொத்து, ஒப்பந்தங்கள், சமூக ரீதியாக பாதுகாப்பிற்கு சட்டங்கள் அமைக்கப்பட்டன. பெண்கள் அரசியல் ரீதியாக இணைந்து தங்களுடைய உரிமைகளுக்காக போராடத் தொடங்கினர்.

அரசு வேலைகளிலும் பெண்கள் சேரத் தொடங்கினர். முக்கியமாக நீதிமன்றங்களில் பெண்கள் வேலைக்கு அமர்ந்தனர். இதனாலேயே பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் நிறைவேறின எனலாம். என் உடல் என் உரிமை என்ற வகையில் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. ஒரு பெண் தன்னுடைய விருப்பத்தின் பேரில்தான் குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்.

அதோடு பிறப்பு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையிலும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள் எல்லாமே பல நாடுகளிலும் பரவியது. அந்தந்த நாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப பெண்களின் உரிமைகள் சம்பந்தமாக சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டங்கள் எல்லாமே பல போராட்டங்களின் வழியாகத்தான் கொண்டுவரப்பட்டது. முக்கியமாக பெண்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக தாங்களே போராடியதன் விளைவாகவே இந்த பலன். ஆனாலும் இன்னமும் பெண்கள் பாகுபாட்டோடுதான் நடத்தப்படுகிறார்கள்’’ என்கிறார் கிளாடியா கோல்டன்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு appeared first on Dinakaran.

Tags : Claudia Golden ,America ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...