குடியாத்தம், அக்.12: குடியாத்தம் அருகே தொட்டியில் நீச்சல் பழக்கிய பிளஸ் 1 மாணவன் நீரில் மூழ்கி பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அகரம்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் தமிழரசன்(16). இவர் குடியாத்தம் ரயில்வே நிலையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் பள்ளிக்கு செல்லாமல் குடியாத்தம் ஹவுசிங் போர்டு பகுதி பின்புறம் உள்ள விவசாய நிலத்தில் உள்ள தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் தொட்டியில் நீச்சல் பழகியதாக தெரிகிறது.
அப்போது, எதிர்பாராத விதமாக தமிழரசன் தொட்டியில் இருந்த நீரில் மூழ்கி உள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த பள்ளி மாணவர்கள், கிராமமக்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது. நீச்சல் பழகிய பிளஸ்1 மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post பிளஸ் 1 மாணவன் நீரில் மூழ்கி பலி குடியாத்தம் அருகே தொட்டியில் நீச்சல் பழகிய appeared first on Dinakaran.
