கூடுவாஞ்சேரி, அக்.8: நண்பரின் ஆதார், பான் கார்டை பயன்படுத்தி வங்கியில் ரூ.20 லட்சம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (எ) தீபக் (26). சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் காரணை புதுச்சேரியைச் சேர்ந்த நசீர் (எ) நஸ்ருதீன் (31) என்பவரும் வேலைபார்த்து வருகிறார். இருவரும் ஒன்றாக வேலைக்குச் சென்று வருவது வழக்கம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மணிகண்டனின் ஆதார் மற்றும் பான்கார்டை நஸ்ருதீன் வாங்கியுள்ளார். அதன்மூலமாக ஒரு தனியார் வங்கியில் ரூ.20 லட்சம் நஸ்ருதீன் கடன் வாங்கியுள்ளார். ஆனால் முறையாக மாத தவணை கட்டாததால், வங்கி சார்பில் மணிகண்டனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போதுதான், தனது ஆதார் கார்டு, பான் கார்டை பயன்படுத்தி நஸ்ருதீன் தனியார் வங்கியில் ரூ.20 லட்சம் கடன் வாங்கியுள்ளது மணிகண்டனுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து நஸ்ருதீனிடம் மணிகண்டன் கேட்டதற்கு ரூ.10.25 லட்சத்தை திருப்பி தந்துள்ளார். மீதமுள்ள ரூ.9.75 லட்சத்தை மணிகண்டனுக்கு திருப்பி தராமல் நஸ்ருதீன் இழுத்தடித்து வந்துள்ளார்.
தொடர்ந்து பணத்தை கேட்டதால், அடியாட்கள் மூலம் மணிகண்டனுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி கடந்த சில நாட்களுக்கு முன் கூடுவாஞ்சேரி போலீசாரிடம் மணிகண்டன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, நசீர் (எ) நஸ்ருதீனிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், மணிகண்டனை ஏமாற்றி, தனியார் வங்கியில் அவர் ரூ.20 லட்சம் கடன் வாங்கியது உறுதியானது. இதனையடுத்து, நேற்று முன்தினம் நஸ்ருதீனை கைது செய்து அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
The post நண்பரின் ஆதார், பான் கார்டை பயன்படுத்தி வங்கியில் ரூ.20 லட்சம் கடன் வாங்கி மோசடி: தனியார் நிறுவன ஊழியர் கைது appeared first on Dinakaran.
