
புதுடெல்லி: கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகிய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில்,‘‘கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது. இடைக்கால பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரியும், மேலும் தங்களை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது எனவும் அறிவிக்க வேண்டும்’’ என்று மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து மேற்கண்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, அதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்து அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உட்பட மேற்கண்ட நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும். அதற்கு தடை விதிக்க முடியாது. அதேப்போன்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க முடியாது’’ என கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி தீர்ப்பு வழங்கி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உட்பட நான்கு பேர்தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அதேப்போன்று கட்சியில் இருந்து நீக்கியதற்கும் தடை விதிக்க வேண்டும். அதேப்போன்று அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது, மேலும் அந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ஆகியவற்றையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அதிமுக பொதுக்குழு தீர்மான விவகாரம்; எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு appeared first on Dinakaran.