புதுடெல்லி: ‘இந்தியாவுடன் நிற்கிறோம்’ என்பது அமெரிக்காவின் விளம்பரம் என்று டெல்லியில் நடக்கும் ஜி20 மாநாடு குறித்து சீன பத்திரிகை விமர்சனம் செய்துள்ளது. டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர். சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிற்குப் பதிலாக, அந்நாட்டு பிரதமர் லீ கியாங் பங்கேற்கிறார். இந்நிலையில், ஜி20 மாநாடு குறித்து சீன அரசு ஆதரவு நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியில், ‘இந்த ஆண்டு டெல்லியில் நடக்கும் ஜி20 உச்சிமாநாட்டில், பொருளாதார சீர்திருத்தங்கள், ராஜதந்திரம் நடவடிக்கைகளில் இந்தியா தீவிர கவனம் செலுத்த விரும்புகிறது.
இந்த உச்சி மாநாடு அனைத்து தடைகளையும் தகர்த்து, வெற்றிக் கதையை உருவாக்கும் என்று நம்புகிறோம். இந்தியா முதன்முறையாக இவ்வளவு பெரிய உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டுவதன் மூலம், தாங்கள் வலிமையுள்ள நாடு என்ற பிம்பத்தை காட்ட இந்தியா விரும்புகிறது. ‘இந்தியாவுடன் நிற்கிறோம்’ என்று அடிக்கடி கூறிக்கொள்ளும் அமெரிக்கா போன்ற நாடுகள், ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் மற்ற நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை விளம்பரப்படுத்திக் ெகாள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் எடுக்கும் முடிவுகளானது, கடந்த காலங்களை காட்டிலும் சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடும்.
ஜி20 உச்சி மாநாட்டிற்கு ஆறு முன்னுரிமை பட்டியலை இந்தியா அறிவித்துள்ளது. பசுமை வளர்ச்சி மற்றும் காலநிலை நிதி, உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் பொருளாதாரம், பொது உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப மாற்றம் மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல் குறித்து பேசவாய்ப்புள்ளது’ என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
The post ‘இந்தியாவுடன் நிற்கிறோம்’ என்பது அமெரிக்காவின் விளம்பரம்: ஜி20 குறித்து சீன பத்திரிகை விமர்சனம் appeared first on Dinakaran.
