புதுடெல்லி: வடமாநிலங்களில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அதன் அபாய அளவை தாண்டியது. அதனால் முன்னெச்சரிக்ைக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால், கடந்த மூன்று நாட்களில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஹத்தினிகுண்ட் தடுப்பணையில் இருந்து அரியானா மாநில ஆற்றில் இருந்து ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், டெல்லியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் யமுனையின் நீர்மட்டம் 205.33 மீட்டர் என்ற அபாய அளவைத் தாண்டியது. இன்று காலை யமுனையின் நீர்மட்டம் 206.24-ஐ எட்டியது. வெள்ளம் சூழ்ந்துள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். அவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் மற்றும் சமூக மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். யமுனை ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கும் வகையில், வெள்ளம் பாதித்த பகுதிகள் மற்றும் யமுனையின் நீர்மட்டத்தை கண்காணிக்க 16 கட்டுப்பாட்டு அறைகளை டெல்லி அரசு அமைத்துள்ளது. அதேபோல் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். வடமாநிலங்களில் பெய்துவரும் இடைவிடாத மழையால் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளத்தால், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள், உடமைகள் சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வடமாநிலங்களில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியது: டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் appeared first on Dinakaran.