செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 முடித்த மாணவர்களுக்கு நான்முதல்வன் உயர்வுக்குப்படி விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆர்டிஓ ஆர்.அனாமிகா நேற்று தொடங்கி வைத்தார். செய்யாறு கல்வி மாவட்டத்திலுள்ள செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு வட்டங்களைச் சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத 181 மாணவர்கள் மற்றும் 201 மாணவிகள் என மொத்தம் 382 மாணவ, மாணவிகளுக்கு, அவர்களின் பெற்றோர்களுடன் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான்முதல்வன் உயர்வுக்குப்படி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை திறன் பயிற்சி உதவி இயக்குனர் தனகீர்த்தி தலைமை தாங்கினார். செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் ஆ.எல்லப்பன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு ஆர்டிஓ ஆர்.அனாமிகா நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்டத்தின் நோக்கங்களை மாணவர்களுக்கு விளக்கி கூறி, நான் முதல்வன் விழிப்புணர்வு புத்தகத்தை அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3 மாணவர்கள் மற்றும் செய்யாறு அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 3 மாணவர்கள் என மொத்தம் 6 மாணவர்களுக்கு நிகழ்விடத்திலேயே கல்லூரி சேர்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள மாணவர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின் உரிய கல்லூரியில் சேர்க்கை நடைபெறும். நிகழ்ச்சி முடிவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெகன் நன்றி கூறினார்.
The post பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆர்டிஓ தொடங்கி வைத்தார் செய்யாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் appeared first on Dinakaran.