×

குடமுருட்டி ஆற்றில் ரூ.1 கோடியில் புதிய படுக்கை அணை கட்டும் பணி நிறைவு: ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும்

வலங்கைமான்: வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில் குடமுருட்டி ஆற்றில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய படுக்கை அணை கட்டும் பணி நிறைவுற்றது. சுமார் ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரியின் கிளை நதிகளில் ஒன்றான குடமுருட்டி ஆறு மூலம் பல ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆறுகளில் இரவு, பகலாக கடந்த சில ஆண்டுகளாக மணல் அள்ளபட்டதாலும், ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டுகள் அகற்றப்பட்டதாலும் ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தால் மட்டுமே பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதேநிலை, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதிக்கு உட்பட்ட பூண்டி வாய்க்கால், சந்தன வாய்க்கால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட தில்லையம்பூர் வாய்க்கால் ஆகியவற்றிற்கு ஏற்பட்டது. இதையடுத்து வாய்க்கால்களின் தலைப்பிற்கு அருகே, குடமுருட்டி ஆற்றில் படுக்கை அணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறையின் மூலம் சுமார் ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் அதன் தலைப்பு பகுதி அருகே குடமுருட்டி ஆற்றில் சந்திரசேகரபுரம் பகுதியில் படுக்கை அணை கட்டப்பட்டது.

ஆனாலும் இந்த படுக்கை அணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, குறுகிய காலத்திலேயே தனது ஆயுளை முடித்துக் கொண்டது. இதன் காரணமாக, சுமார் ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாசனம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. சில லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தற்காலிகமாக மரம் மற்றும் மணல் மூட்டைகள், கருங்கற்கள் ஆகியவைகளை கொண்டு அடைக்கப்பட்டது. இது விவசாயிகளுக்கு உரிய பலனை ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பொதுப்பணித்துறைக்கு வருவாய் இழப்பும், விவசாயிகளுக்கு மன உளைச்சலும் ஏற்பட்டது .

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா தில்லையம்பூர் விவசாயிகள் மற்றும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆதிச்சமங்கலம் விருப்பாச்சிபுரம் வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சந்தன வாய்க்கால் பாசன விவசாயிகள் ஆகியோர் குடமுருட்டி ஆற்றில் மீண்டும் தரமான படுக்கை அணை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, காவிரி உட்கோட்டத்தில் உள்ள நீர்ப்பாசன கட்டமைப்புகளை நீட்டித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறையின் மூலம் சுமார் 97.91 லட்சம் மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டு பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.

முதல் கட்டமாக, பழுதடைந்த நிலையில் இருந்த பழைய படுக்கை அணை, இயந்திரத்தின் உதவியோடு அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் பணிகள் துவங்கப்பட்டு இரவு, பகலாக போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில், டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆற்றி்ல் தண்ணீர் வந்ததால், பணிகள் முழுமை அடையாமல் 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில், பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது.

மேலும் குடமுருட்டி ஆறு பிரிவு சந்தன வாய்க்கால் ரெகுலேட்டர் பழுதடைந்த நிலையில் அவற்றிற்கு பதிலாக புதிதாக ரெகுலேட்டரும் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமான பணிகள் நிறைவு பெற்றது. பணிகள் நிறைவு பெற்ற நிலையில், தில்லையம்பூர், பூண்டி, சந்தன வாய்க்கால் பாசன தார விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post குடமுருட்டி ஆற்றில் ரூ.1 கோடியில் புதிய படுக்கை அணை கட்டும் பணி நிறைவு: ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் appeared first on Dinakaran.

Tags : Kudamuruti river ,VALANKAYMAN ,Kudamuruti ,Chandrasekarapuram ,Valangkaiman ,Kudumuruti River ,Dinakaran ,
× RELATED கழுத்து பயிராக இருக்கும் கதிர்களை...