கிருஷ்ணகிரி, ஏப்.19: கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, உழவர் சந்தையில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சி, கொத்தபெட்டா அங்கன்வாடி மையம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மையம், கிருஷ்ணகிரி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன் கடை, கூட்டுறவு மருந்தகம் மற்றும் உழவர் சந்தை ஆகியவற்றை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். கொத்தப்பெட்டா அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட அவர், குழந்தைகளின் தினசரி வருகை பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மின் இணைப்பு, குழந்தைகளின் எடை, உணவு பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள் சரியான நேரத்திற்கு வருகை தர அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என கூறினார். மேலும், அங்கன்வாடி மையம், சமையலறை பகுதிகளை தூய்மையாக பராமரிக்கவும், தினசரி வழங்கப்படும் உணவு பட்டியலை பட்டியலிட வேண்டும் என அங்கன்வாடி பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, கொத்தப்பேட்டாவில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ₹8 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டு குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படுகிறதா என்பதை பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பழுதடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட காந்திரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன் கடையில் அரிசி, சக்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகள் குறித்த பதிவேடுகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கூட்டுறவு மருந்தகத்தை பார்வையிட்டு தினசரி விற்பனை, மருந்துகள் இருப்பு, காலாவதியான மருந்து பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், கிருஷ்ணகிரி உழவர் சந்தையை பார்வையிட்டு அங்காடிகளின் எண்ணிக்கை, தினசரி காய்கறிகள் வரத்து, விற்பனை, வாகனங்கள் நிறுத்தும் இடம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், காய்கறிகள் இருப்பு வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன கிடங்கு, மின்விளக்கு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது தாசில்தார் சம்பத் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
The post ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.
