×

குன்றத்தூர் அருகே சோகம் விபத்தில் காதலி பலி: காதலன் படுகாயம்

பூந்தமல்லி: குன்றத்தூர் அருகே நடந்த விபத்தில் காதலி பரிதாபமாக பலியானார். காதலன் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர். ஆவடியை சேர்ந்தவர் அஜித்(22). இவர் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது காதலி செல்வி(21). பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். நேற்று இருவரும் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

அஜித் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாலையில் சிறிது தூரம் சென்று தடுப்புச்சுவரின் மீது ஏறி நின்றது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அஜித் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குன்றத்தூர் அருகே சோகம் விபத்தில் காதலி பலி: காதலன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kundarthur ,Poonthamalli ,Kuntharthur ,Awadi ,Kundarathur ,Badagayam ,
× RELATED பூந்தமல்லியில் பரபரப்பு இந்து...