புதுடெல்லி: ஒரே தேசம், ஒரே பால் என்ற கோஷத்தை பாஜ எழுப்ப அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். குஜராத்தில் உள்ள அமுல் நிறுவனம் பெங்களூருவில் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, அம்மாநில எதிர்க்கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமுல் வருகையால் கர்நாடக பால் கூட்டுறவு அமைப்பு சார்பில் நடத்தப்படும் நந்தினி நிறுவனத்தின் விற்பனை சரியும் என்று கூறி, பலரும் அரசை விமர்சித்து வருகின்றனர். கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த விவகாரம் பெரிய பிரச்னையை கிளப்பி உள்ளது.
இந்நிலையில்,காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு அமைப்புகள் மீதான கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு எடுக்கும் முயற்சிகளை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும். ஒன்றிய அரசின் தூண்டுதலினால் அமுல் மற்றும் நந்தினி நிறுவனங்கள் இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்த முயற்சிகள் நடக்கிறது. இதே போல் செய்து ஒரே தேசம்,ஒரே பால் என்ற கோஷத்தை பாஜ எழுப்ப முயன்றால் அதனை அனுமதிக்க மாட்டோம். கூட்டுறவு அமைப்புகள் மாநில அரசு சம்மந்தப்பட்டது என்று அரசியல் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதனை மீறும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
The post ஒரே பால் கோஷத்தை அனுமதிக்க மாட்டோம்: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.