ஈரோடு: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வணிக விரிவாக்க மானிய நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கிய பின் கூறியதாவது, தமிழ்நாடு அரசு மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கிராம பகுதிகளில் வறுமை ஒழிப்பையும் தாண்டி தொழில் நிறுவனங்களை உருவாக்குதல், நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி நிரந்தர வளர்ச்சி மற்றும் வளமான வாழ்வு பெற்று கிராமபுற மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துதலை நோக்கமாக கொண்டு ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சென்னிமலை சத்தியமங்கலம், மற்றும் தாளவாடி வட்டாரங்களில் 77 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இன்றையதினம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வணிக விரிவாக்க மானிய நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் தாமோதரன், செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
