குளித்தலை, பிப்.24: குளித்தலை அருகே மேட்டுமருதூர் பகவதி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். குளித்தலை அருகே மேட்டுமருதூர் குடித்தெருவில் பகவதி காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கர்ப்பக்கிரகம், அர்தத மகா மண்டபங்கள், முன் மண்டபம், விமானங்கள் பதுமைகள் அனைத்தும் சாஸ்திர முறைப்படி புதுப்பித்தும் வர்ணங்கள் வைத்தல், மின்சார வசதி என அனைத்து திருப்பணி வேலைகளும் ஊர் பொதுமக்களின் சார்பில் முடிவடைந்த நிலையில் இன்று (24ம் தேதி) கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
அதனைஒட்டி நேற்று மருதூர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக மேளதாளம் முழங்க மேட்டுமருதூர் பகவதி காளியம்மன் கோயில் வந்தடைந்தனர். அங்கு அமைக்கப்பட்ட யாகபூஜைக்கு அனைத்து தீர்த்தங்களும் வைக்கப்பட்டது. தொடர்ந்து மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ம்ருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரசாபந்தனம், கடஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், உபசார பூஜை, தீபாரதணை தொடர்ந்து இரவு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.