×

வியாசர்பாடி - எருக்கஞ்சேரி இடையே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

பெரம்பூர், பிப்.21: வியாசர்பாடி - எருக்கஞ்சேரி இடையே சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூலக்கடை மேம்பாலம் பகுதியில் இருந்து வியாசர்பாடி மார்க்கெட் வரை உள்ள பகுதிகளான எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை மற்றும் அம்பேத்கர் கல்லூரி சாலை ஆகிய 2 சாலைகளிலும், சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளன.

மேலும், இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால், திடீர் பள்ளங்களால் ஏற்படும் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும், காலை மற்றும் மாலை வேலைகளில் பைக்குகளில் அவசர அவசரமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளனர். குறிப்பாக, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பிக் ஹவர்ஸ் எனப்படும் காலை வேளையில் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் ஆவதாகவும், மேலும் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புக்கள் ஏற்படும் முன், இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து தர வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : Vyasarpady ,- Erukkancheri ,
× RELATED வியாசர்பாடி எம்.கே.பி. நகர் மாநகராட்சி...