முசிறி,ஏப்.13: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் அம்மன் தலங்களில் முக்கியமானதாகும். தற்போது சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி மூன்றாம் நாளான நேற்று (12ம் தேதி) காலை அம்மன் பல்லக்கில் புறப்பட்டு ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். மாலை 5 மணிக்கு அபிஷேகம் முடித்து இரவு சிறப்பு மலர் அலங்காரத்துடன் மாரியம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி வழிநடை கண்டருளினார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.