×

தாசில்தாரை தாக்கியதை கண்டித்து ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து வருவாய்த்துறையினர் போராட்டம்

நாமக்கல், ஏப்.12: தாசில்தாரை தாக்கியதை கண்டித்து ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வரும் தாசில்தார் கார்த்திகேயனை, செங்கோட்டையன் அவரது மகன் இளஞ்செழியன் மற்றும் வக்கீல் குமார் ஆகியோர், புகார் மனு அளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், தாசில்தாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட வக்கீல் குமார் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 4ம் தேதி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்மணி, ஆனந்தன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

இதில் வக்கீல் குமார் உள்ளிட்ட 3 பேர் மீதும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க, அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, வருவாய்த்துறை பணியாளர்கள் அனைவரும் 11ம் தேதி ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தாசில்தார், விஏஓக்கள், கிராம உதவியாளர்கள் வரை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வருவாய்த்துறையில் பணியாற்றும் சுமார் 980 பேர் கலந்து கொண்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அலுவலகங்களும் நேற்று பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ் கேட்டு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Tags : Tashildar ,
× RELATED கடலூரில் குடுகுடுப்பைக்காரர்களுக்கு...