×

ஆட்டையாம்பட்டி அருகே வீடு தீப்பிடித்து எரிந்து நாசம்

ஆட்டையாம்பட்டி, ஏப்.9: ஆட்டையாம்பட்டி வீடு தீப்பிடித்து எரிந்தபோது சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டையாம்பட்டி அருகே பெரிய சீரகாபாடி மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் வெங்கடேஷ்(46). இவரது மனைவி ராணி(43). இவர்களுக்கு மணிமாறன்(24), பிரபாகரன்(23) என்ற மகன்களும், தனலட்சுமி(20) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் தகரம் சீட் போட்ட குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். வெங்கடேஷ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் நேற்று காலை வழக்கம்போல் தறி ஓட்ட சென்றுவிட்டார். மகள் கல்லூரிக்கு சென்றுவிட்டார். மதியம் வெடி சத்தத்துடன் வீடு தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு திடுக்கிட்ட பொதுமக்கள் உடனடியாக சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில், வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் சூடு தாங்காமல் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், வீட்டில் வைக்கப்பட்டிருந்த ₹3 லட்சம் ரொக்கப் பணம், 10 பவுன் நகை, 3 கணினி, குடும்பத்தில் உள்ள 5 நபர்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, குழந்தைகளின் பள்ளிக் கல்வி சான்றிதழ் என அனைத்தும் எரிந்து நாசமானது. மின் கசிவின் காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Attayampatti ,
× RELATED ஆட்டையாம்பட்டியில் வீரபாண்டி...