×

திருப்பாலைக்குடியில் கால்நடை மருத்துவமனை வேண்டும் கிராமமக்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.10: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடியில் நிரந்தரமாக கால்நடை மருத்துவமனை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியான திருப்பாலைக்குடியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கான ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதற்கு மருத்துவம் பார்க்க உப்பூர் அல்லது சோழந்தூர் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது.

காரணம் திருப்பாலைக்குடியில் நிரந்தரமாக ஒரு கால்நடை மருத்துவமனை இல்லை என்பதால் தான். எனவே மாவட்ட நிர்வாகம் திருப்பாலைக்குடி, பழங்கோட்டை பால்குளம், சம்பை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் நலன் கருதி விரைவில் நிரந்தரமாக ஒரு கால்நடை மருத்துவமனையை அமைத்து உரிய மருத்துவரை நியமனம் செய்து தர வேண்டும், பொதுமக்களின் சிரமத்திற்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் கூறுகையில், திருப்பாலைக்குடியை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான விவசாயிகள் கால்நடை வளர்த்து வருகின்றனர். மழை, வெயில் காலங்களில் கால்நடைகளுக்கு விதவிதமாக நோய்கள் ஏற்படுகின்றன. இதை குணப்படுத்துவதற்காக உப்பூர் அல்லது சோழந்தூர் செல்ல வேண்டியுள்ளது. இதனால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே திருப்பாலைக்குடியில் நிரந்தரமாக கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Tiruppalaikudi ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு